Published : 29 Nov 2018 09:34 PM
Last Updated : 29 Nov 2018 09:34 PM

விஷால் மீது முகநூலில் மீடூ புகார்: சிறுமி அளித்த புகாரில் முகநூல் பெண் மீது போலீஸார் வழக்கு

நடிகர் விஷாலுடன் 16 வயது சிறுமியை இணைத்து மீடூ மூலம் பாலியல் புகார் கூறிய பெண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் சென்னை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்

நடிகர் விஷால் நடிகர் சங்க பொறுப்பில் இருக்கிறார், மீடூ என்ற இயக்கம் மூலம் சமூக வலைத்தளங்களில் சின்மயி உள்ளிட்ட பல பெண்கள் திரைப் பிரபலங்கள் மீது ‘மீடூ’ வில் பாலியல் புகார்களை கூறியிருந்தனர்.

மீடூ விவகாரம் பெரிதாகிய நிலையில் அதற்கான பாதுகாப்புக்குழுவை அமைத்தார் விஷால். இந்நிலையில், கோபாலபுரத்தைச் சேர்ந்த விஸ்வதர்ஷினி என்பவர் தனது முகநூலில் காணொளி வெளியிட்டார். அதில் பேசும் போது நடிகர் விஷால் குறித்து பரபரப்பு தகவல்களை கூறினார்.

கோபாலபுரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பிற்கு அதிகாலை 2 மணிக்கு வந்த விஷால், 2 மணி நேரம் கழித்து, 4 மணியளவில் பின் வாசல் வழியாக சுவர் ஏறி குதித்து ஓடியது ஏன்? எதற்காக அங்கே வந்தார்? என அவர் கேள்வி எழுப்பினார்.

இது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆதாரமில்லாமல் இப்படி கூறலாமா என்கிற கேள்வி எழுந்தது. அதற்கு வேண்டுமானால் சிசிடிவி காட்சிகளை எடுத்து என அந்தப்பெண் மீண்டும் சவால் விட்டார்.

நடிகர் விஷால் அதிகாலை 4 மணிக்கு சுவர் ஏறி குதித்து தப்பி ஓடியதாக ஃபேஸ்புக்கில் விஷ்வதர்ஷினி புகார் கூறிய  அந்த வீட்டில் வசிக்கும் 16 வயது சிறுமி பாலியல் ரீதியாக தன்னை பற்றி அவதூறு பேசியதாக விஷ்வதர்ஷினி மீது தேசிய குழந்தைகள் ஆணையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை மாநகர காவல் ஆணையருக்கு தேசிய குழந்தைகள் நல ஆணையம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் காவல் ஆணையர் உத்தரவின்பேரில் 16 வயது சிறுமியிடம் ராயப்பேட்டை மகளிர் காவல் நிலைய போலீஸார் வாக்கு மூலம் பெற்று விசாரணை நடத்தியதில் புகார் உண்மை என தெரியவந்தது.

இதையடுத்து விஷால் மீது புகார் கூறி காணொளி வெளியிட்ட  விஸ்வதர்ஷினி மீது ராயப்பேட்டை மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.

 

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x