Published : 03 Apr 2014 08:40 PM
Last Updated : 03 Apr 2014 08:40 PM

பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய ராட்சத கொடுவா மீன்!

பாம்பன் நாட்டுப் படகு மீனவர் வலையில் ராட்சத கொடுவா மீன் சிக்கியது. இதனை பாம்பன் பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

பாம்பன் போரிஸ்டன் என்பவரின் நாட்டுப் படகில் நான்கு மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் புதன்கிழமை இரவு சென்றனர். நள்ளிரவில் மன்னார் வளைகுடா தீவுப் பகுதியில் மீனவர்கள் வலையை விரித்து காத்திருந்தனர். அப்போது ராட்சத கொடுவா மீன் ஒன்று சிக்கியது. அது சுமார் 16 கிலோ எடையும், 3 அடி நீளமும், 2 அடி உயரமும் உடையதாகவும் இருந்தது.

பொதுவாக கொடுவா மீன் அதிகப்பட்சமாக 5 கிலோ வரை எடை கொண்டது மட்டுமே மன்னார் வளைகுடாவில் பிடிபடுவது வழக்கம். ஆனால், இது ராட்சத கொடுவா மீனாக இருந்ததால், இந்த பாம்பன் மக்கள் வியாழக்கிழமை கடற்கரையில் ஆர்வத்துடன் வந்து பார்வையிட்டனர்.

இந்த மீனைப் பற்றி மரைக்காயர் பட்டிணத்தில் உள்ள மத்திய மீன் ஆராய்ச்சித்துறை ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறும்போது, "இந்த மீனின் பெயர் Giant Sea Perch. இதனை தமிழில் ராட்சத கொடுவா மீன் என்றும் அழைக்கலாம்.

பொதுவாக மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணைப்பில் அதிகப் பட்சம் 5 கிலோ எடை வரையிலும் வளரக் கூடிய கொடுவா மீன்களே அதிகம் காணப்படுகிறது. இந்தோ பசிபிக் கடல், அட்லாண்டிக், ஆர்டிக், பசிபிக் ஆகிய பெருங்கடல்களில் இத்தகைய ராட்சத கொடுவா மீன்கள் காணப்படும். அத்தகைய பெருங்கடல்களில் ஒன்றில் திசை மாறி மீனவரின் வலையில் வலையில் இந்த ராட்சத கொடுவா மீன் சிக்கியிருக்கலாம்.

மேலும் மழைக்காலங்களில் தான் தமிழக மீனவர்களின் வலைகளில் கொடுவா மீன்கள் அதிகளவில் பிடிபடும். ஆனால் கோடை காலத்தில் ராட்சத கொடுவா மீன் பிடிப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை அளிக்கிறது" என்றார்.

பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய ராட்சத கொடுவா மீன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x