Published : 17 Nov 2018 06:18 PM
Last Updated : 17 Nov 2018 06:18 PM
தமிழக அரசு தவறு செய்தால் தட்டிக் கேட்கவும் செய்வோம், நல்லது செய்தால் தட்டிக் கொடுக்கவும் செய்வோம் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
'கஜா' புயலால் நாகப்பட்டினம் உள்ளிட்ட 6 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. நாகை வேதாரண்யம் அருகே புயல் கரை கடந்ததால் அதிக பாதிப்பு அப்பகுதியில் ஏற்பட்டது. புயல் பாதிப்புக்குள்ளான நாகை மாவட்டம் தரங்கம்பாடி, அக்கரைப்பேட்டை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய இடங்களில் இன்று (சனிக்கிழமை) திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தி பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், "ஏற்கெனவே தமிழகத்தில் சுனாமி ஆழிப்பேரலை, தானே, வர்தா, ஒக்கி உள்ளிட்ட புயல்கள் தாக்கியுள்ளன. இப்போது 'கஜா' புயல் 8 மாவட்டங்களை அதிக அளவில் பாதித்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்ததால் நானே தமிழக அரசை ஓரளவுக்கு பாராட்டியிருக்கிறேன். திமுகவைப் பொறுத்தவரை தமிழக அரசு தவறு செய்தால் அதனை தட்டிக் கேட்போம். பாராட்டும் வகையில் நடந்தால் தட்டிக் கொடுக்கவும் செய்வோம்.
இன்னும் வேகமாக நடவடிக்கை எடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். மழை காலத்திற்கு முன்னே தூர்வாரும் பணிகளை தமிழக அரசு செய்யவில்லை. 50-க்கும் மேற்பட்ட மக்கள் இந்தப் புயலால் இறந்திருக்கிறார்கள்" என ஸ்டாலின் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT