Published : 17 Nov 2018 12:39 PM
Last Updated : 17 Nov 2018 12:39 PM

காதல் தம்பதிகள் ஆணவப் படுகொலை: நாகரிக சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது; ராமதாஸ் கண்டனம்

ஓசூர் காதல் இணையர் படுகொலை கண்டிக்கத்தக்கது என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் கடந்த 4 மாதங்களுக்கு முன் சாதி மறுப்பு திருமணம் செய்த காதல் ஜோடி நந்தீஷ் - சுவாதி இருவரும் மாயமான நிலையில், கர்நாடகாவில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், நந்தீஷ் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். சுவாதி வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்.

இருவரையும் சாதி ஆணவ கொலை செய்திருக்கலாம் என கருதி, போலீஸார்  சுவாதியின் அப்பா ஸ்ரீனிவாஸ், பெரியப்பா வெங்கடேஷ் மற்றும் கிருஷ்ணன் ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "ஓசூர் காதல் இணையர் படுகொலை கண்டிக்கத்தக்கது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த சூலக்கொண்டபள்ளியைச் சேர்ந்த காதல் இணையர் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் சிவனசமுத்திரம் நீர்வீழ்ச்சி அருகில் படுகொலை செய்து காவிரி ஆற்றில் வீசப்ப்பட்டனர் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.

இந்த படுகொலைகள் கண்டிக்கத்தக்கவை. நாகரிக சமுதாயத்தில் இத்தகைய படுகொலைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. இதை நான் பல்வேறு தருணங்களில் குறிப்பிட்டிருக்கிறேன்.

இனி வரும் காலங்களில் இத்தகைய படுகொலைகள் நடக்காமல் தடுத்தத் தேவையான நடவடிக்கைகளையும், சீர்திருத்தங்களையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x