

தமிழகத்தின் தென் மாவட்டங்களான நெல்லை மாவட்ட மலைப்பகுதியிலும், தூத்துக்குடியிலும் கன மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பெயரில் எழுதிவரும் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
“வடகிழக்குப் பருவமழை தொடங்கியபின், திருநெல்வேலி மலைப்பகுதியிலும், தூத்துக்குடி மாவட்டத்திலும் கன மழை பெய்து வருகிறது. முதல் முறையாக, மணிமுத்தாறு அணையில் 200 மிமீட்டருக்கும் அதிகமாக 286 மிமீ மழை பதிவாகி இருக்கிறது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நேற்று கன மழைபெய்து இருக்கிறது. முதல் முறையாக 200 மிமீ அதிகமாக மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அளவுக்கு மழை பெய்திருக்கிறது.
கன்னியாகுமரி, தூத்துக்குடி, தேனி, நாகை, தஞ்சை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் சிறப்பாக மழை பெய்து இருக்கிறது.
சென்னையில் மழை?
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த சில நாட்களுக்கு ஆங்காங்கே சில இடங்களில் திடீரென லேசான மழை பெய்யும். மற்ற வகையில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும். சென்னை மட்டுமல்ல தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் தீபாவளியன்று வறண்ட வானிலையே இருக்கும்.
தென் மாவட்டங்களான நெல்லை, கன்னியாகுமரி, மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தின் சில பகுதிகள்,ராமநாதபுரம் மாவட்டம் ஆகிய இடங்களில் இன்று மீண்டும் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அடுத்து வரும் நாட்களில் வானிலையில் பெரும்பாலும் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை.”
இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.