Published : 16 Nov 2018 08:18 AM
Last Updated : 16 Nov 2018 08:18 AM

தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசு அடைவதற்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் அல்ல: அறிக்கை குறித்து உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசு அடைவதற்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் அல்ல என்ற மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் அறிக்கையை ஏற்றுக்கொள்வதும், ஏற்காததும் தமிழக அரசின் விருப்பம் என மத்திய அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசு அடைவதற்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் அல்ல என மத்திய நீர்வளத் துறையின் கீழ் செயல்படும் மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த அறிக்கைக்கு தடை விதிக்கக் கோரி தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், ‘‘இதுதொடர் பாக தமிழக அரசுக்கு முன்கூட் டியே தகவல் தெரிவிக்காமல் தூத்துக்குடியில் நிலத்தடி நீரை ஆய்வு செய்து இந்த அறிக் கையை நிலத்தடி நீர் வாரியம் சட்டவிரோதமாக வெளியிட்டுள் ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஏற்கெனவே முழுமையாக ஆய்வு செய்து தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசு அடைவதற்கு ஸ்டெர்லைட் ஆலைதான் காரணம் என உறுதி செய்துதான் அந்த ஆலையை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டது’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன், ‘‘தூத்துக்குடியில் நிலத்தடிநீர் மாசு அடைவதற்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் அல்ல என்றுதான் மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையை தமிழக அரசு சரியாக புரிந்து கொள்ள வில்லை. ஸ்டெர்லைட் ஆலைக் குள் சென்று மத்திய அரசின் நிபுணர்கள் ஆய்வு செய்யவில்லை. அதேநேரம் ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறவில்லை. அந்த அறிக்கையை ஏற்றுக்கொள்வதும், ஏற்காததும் தமிழக அரசின் விருப்பம். இதில் நாங்கள் வேறு எதுவும் கூறவிரும்பவில்லை.

அதேநேரம் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான இந்த வழக்கை விசாரிக்க இந்த நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. இந்த வழக்கை உச்ச நீதிமன்றம்தான் விசாரிக்க முடியும் என்பதால், இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என்று வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை வரும் 19-க்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x