Published : 15 Nov 2018 02:05 PM
Last Updated : 15 Nov 2018 02:05 PM
ஊழல் புகார்மயமான ஆட்சியில் மக்கள் நலன் புதைகுழிக்குள் தள்ளப்பட்டிருக்கிறது என, அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டிடிவி தினகரன் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "சென்னை மாநகராட்சியில் புயல் வெள்ள நீர் வடிகால் கட்டுமானப் பணிகளுக்காகவும் மற்றும் சாலைகள் அமைப்பதற்காகவும் கோரப்பட்ட ரூபாய் 740 கோடி மதிப்பிலான டெண்டரில், மிகப்பெரிய முறைகேட்டில் மாநகராட்சியின் முக்கிய அதிகாரிகள் கூட்டாக ஈடுபட்டிருப்பதாக ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி, அந்த டெண்டர்களை ரத்து செய்யுமாறு அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்துள்ளதாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.
மழைக்காலங்களில் புயல் வெள்ளப் பாதிப்புகளால் மக்கள் தங்களது உடைமைகளை இழப்பதும், பல நேரங்களில் உயிர் சேதங்கள் ஏற்படுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. இதனைத் தடுக்கும் பொருட்டு, மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்வதும், நீர் நிலைகளை முறையாக பராமரிப்பதும், விரிவுபடுத்துவதும் அவசியமான ஒன்று. அவ்வாறு மக்களின் வாழ்வாதாரத்தோடு ஒன்றியப் பணிகளில் முறைகேடுகள் நடைபெற அனுமதிக்கும் அரசானது, மக்களின் நலனைச் சிறிதும் சிந்திக்காத மக்கள் விரோத அரசு என்பதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்?
திரும்பும் திசையெல்லாம் ஊழல் குற்றச்சாட்டு, காணும் காட்சியெல்லாம் நிர்வாக அவலம், இதுதான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசின் சாதனை. ஊழல் புகார்மயமான ஆட்சியில் மக்கள் நலன் புதைகுழிக்குள் தள்ளப்பட்டிருக்கிறது என்பதைத்தான் இச்செய்தி காட்டுகிறது.
மக்களின் அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்யும் உள்ளாட்சித் துறையில் பூதாகரமாக எழுந்து வரும் தொடர் ஊழல் குற்றச்சாட்டுகள், அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் நடைபெறுவதைத்தான் எடுத்துரைக்கிறது. தொடர்ந்து ஊழல் குற்றசாட்டுக்கு உள்ளாக ிவரும் உள்ளாட்சித் துறைக்கும், அதனைத் தடுக்கத் தவறும் தமிழக அரசுக்கும் எனது கடும் கண்டனம்" என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT