Published : 15 Aug 2014 10:23 AM
Last Updated : 15 Aug 2014 10:23 AM
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த பொத்தேரியில் கார் கண்ணாடியை உடைத்ததாக கூறி, பணம் கேட்டு 2 கல்லூரி மாணவர்கள் வியாழக்கிழமை கடத்தப்பட்டனர். மாணவர்களை கடத்திச் சென்ற கார் ஓட்டுநர் உள்ளிட்ட 3 பேரை மறைமலைநகர் போலீஸார் கைது செய்து மாணவர்களை மீட்டனர்.
இதுகுறித்து, மறைமலைநகர் போலீஸ் வட்டாரம் கூறியதாவது:
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களான காளேஷ் (20), மணிகண்டன் (20), தில்லிஹிச்பால் (22) ஆகிய மூவரும், பொத்தேரி அருகே கோனாதி கிராமத்தில் தங்கி, அதே பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் மற்றும் பி.டெக். படித்து வருகின்றனர்.
இவர்கள் மூவரும் புதன்கிழமை இரவு தனியார் பல்கலைக்கழகம் அருகே உள்ள சிற்றுண்டிக் கடைக்கு சென்றுள்ளனர். அப்போது, அங்கிருந்த அருண் (27) என்ற கார் ஓட்டுநரிடம் ஏற்பட்ட தகராறில் காரின் கண்ணாடியை மாணவர்கள் மூவரும் உடைத்துள்ளனர். இதனால் அருண், தனது நண்பர்கள் தினேஷ் (24) மற்றும் சந்தீப் (24) ஆகியோருடன் சேர்ந்து மாணவர்களை பணம் கேட்டு மிரட்டியுள்ளார். ஆனால் தங்கள் கையில் தற்போது பணம் இல்லை என்றும், தாம்பரம் பகுதியில் உள்ள நண்பரிடம் பணம் ஏற்பாடு செய்து தருவதாகவும் மாணவர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து அருண் தனது நண்பர்களுடன் சேர்ந்து, மாணவர்களை காரில் ஏற்றிக்கொண்டு இரவு முழுவதும் சுற்றியுள்ளார். ஆனால், மாணவர்கள் மூவரும் யாரிடமும் பணம் வாங்கி தரவில்லை. இதனால், ஆத்திரமடைந்த ஓட்டுநர் அருண், மணிகண்டனை மட்டும் தாம்பரம் பகுதியில் இறக்கிவிட்டு, பணத்துடன் வந்தால் நண்பர்களை விடுவிப்பதாக கூறி மற்ற இருவரையும் காரில் கடத்திச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து மணிகண்டன் மறைமலைநகர் போலீஸில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார், தாம்பரம் அருகே காரை மடக்கி பிடித்து மாணவர்கள் இருவரையும் வியாழக்கிழமை மீட்டனர். கார் ஓட்டுநர் அருண், அவரது நண்பர்கள் தினேஷ், சந்தீப் ஆகியோரை கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT