Published : 15 Nov 2018 01:07 PM
Last Updated : 15 Nov 2018 01:07 PM

புயல் முன்னெச்சரிக்கை தகவல் அறிவிப்பு அமைப்பு: சோதனை அடிப்படையில் தொடங்கி வைத்தார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் 

கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் புயல் முன்னெச்சரிக்கை தகவல் அறிவிப்பு அமைப்பினை சோதனை அடிப்படையில் சென்னை, சேப்பாக்கம் மாநில கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட செய்திக்குறிப்பில், "பேரிடர் காலங்களில் தகவல் பரிமாற்றம் என்பது மிக முக்கிய செயல் என்பதால் பேரிடர் பாதிப்புகளுக்கு உள்ளாகும் மக்களுக்கு உரிய காலத்தில் எச்சரிக்கை தகவல்களை தெரிவிக்கும் வகையில் முன்னெச்சரிக்கை தகவல் அறிவிப்பு அமைப்புகள் கடலோரப் பேரிடர் அபாயக் குறைப்பு திட்டத்தின்  (சிடிஆர்ஆர்பி) கீழ் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் எல்காட் நிறுவனம் மூலமாக ரூ.50 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பேரிடர் காலங்களில், ஆபத்து நெருங்குவதற்கு முன்பாகவே, பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் வசித்து வரும் ஆண்கள், பெண்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோருக்கு உரிய எச்சரிக்கை தகவல்கள் அனுப்பப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறச்  செய்து உயிரிழப்புகளை பெருமளவில் குறைப்பதே இவ்வமைப்பின் முக்கிய நோக்கமாகும். 

இவ்வமைப்பானது, இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் இந்திய கடல்சார் தகவல் மையங்களிலிருந்து பெறப்படும் எச்சரிக்கை தகவல்களை, ஒலி அலைகள் மூலமாகவும், முன்பதிவு ஒலி எச்சரிக்கை செய்திகள் மூலமாகவும், நேரடி ஒலி எச்சரிக்கை செய்திகள் மூலமாகவும் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சென்றடையும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும் இவ்வமைப்பின் சிறப்பு அம்சமாக பேரிடரால் பாதிக்கப்படும் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும், பிரத்யேக அவசர தகவலை மென்பொருள் மூலம் தேர்வு செய்து அனுப்ப இயலும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x