Published : 03 Nov 2018 10:04 AM
Last Updated : 03 Nov 2018 10:04 AM
அதிமுக பேனர்களை கிழித்தது தொடர்பாக என் மீது தொடரப்பட்ட வழக்கை சட்டப்படி சந்திப்பேன் என்று அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
பசும்பொன்னில் தேவர் குருபூஜையையொட்டி அதிமுக சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அதிருப்தி காரணமாக மக்கள் கிழித்திருக்கலாம். அதற்கும் எங்கள் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை. குருபூஜை நிகழ்ச்சிக்கே வராத எங்கள்கட்சியினரையும் போலீஸார் பிடித்துச் செல்வதாக கூறுகிறார்கள். இதற்கெல்லாம் எங்கள் தொண்டர்கள் அச்சப்பட மாட்டார்கள். அவர்களை முன்ஜாமீன் எடுக்கச் சொல்லியுள்ளேன். ஆனால், நான் முன்ஜாமீன் வாங்கவில்லை.
இவர்கள் பதிவு செய்யும் பொய் வழக்குகளுக்கு எல்லாம்முன்ஜாமீன் வாங்கிக் கொண்டிருக்க முடியாது. அப்படியே கைதுசெய்தாலும் சிறை செல்லத் தயாராக இருக்கிறேன். பேனர்களை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள். அதைவிடுத்து மேலிடத்தில் இருந்து அழுத்தம் வந்ததாகக் கூறி காவல்துறை எங்களை கைது செய்தால் நீதிமன்றம் செல்வோம்.
நானும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் மதுரையில் ஒரேஹோட்டலில் தங்கியிருந்தது பற்றி மக்களுக்கே தெரியாத பத்திரிகையில் வந்த செய்தியையொட்டி தொலைக்காட்சியில் விவாதம் நடத்தியுள்ளனர். அந்த தொலைக்காட்சி தன்னையே தரம் தாழ்த்திக் கொண்டது என்பதே எனது தாழ்மையான கருத்து.
2 மாதத்துக்கு முன்பு திருவண்ணாமலையில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தேன். அதே ஹோட்டலில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் தங்கியிருந்தார். அப்போது நாங்கள் ரகசியமாக சந்தித்து பேசியதாக தொலைக்காட்சியில் விவாதம் நடத்தவில்லை.
அன்று வாஜ்பாய் அஸ்தி ஊர்வலம்நிகழ்ச்சிக்காக தமிழிசை சவுந்தரராஜன் அங்கு வந்திருக்கிறார். அதுபோல வெவ்வேறு ஊர்களில் ஹோட்டலில் நான் தங்கியிருந்தபோது பல கட்சித் தலைவர்கள் தங்கியுள்ளனர். இது விவாதிக்கக்கூடியது அல்ல.
ஆர்.கே.நகர் தொகுதி போலத்தான் 20 தொகுதிகளிலும் நடக்கும். அதிமுக டெபாசிட்கூட வாங்கமுடியாது. இதை ஆணவத்தினால் சொல்லவில்லை. மக்கள் மனநிலை அப்படித்தான் இருக்கிறது. நாங்கள் மேல்முறையீடு போகவில்லை என்றதும் ஏன் இப்படி எல்லோரும் தாண்டிக் குதிக்கின்றனர் என்று தெரியவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT