Last Updated : 18 Nov, 2018 09:42 AM

 

Published : 18 Nov 2018 09:42 AM
Last Updated : 18 Nov 2018 09:42 AM

ஐஎம்இஐ நம்பரில் மாற்றம் செய்து மோசடி; தமிழகத்தில் திருடப்படும் செல்போன்கள் கேரளாவில் விற்பனை: சென்னையில் இரு நாட்களில் 2,500 போன்கள் பறிமுதல்

தமிழகத்தில் திருடப்படும் செல் போன்கள் கேரளாவில் விற்பனை செய்யப்படுவதை சென்னை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். தொடர்ந்து 2 நாட்கள் நடத்தப்பட்ட சோதனையில் 2,500 திருட்டு செல்போன்கள் பறி முதல் செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் கொள்ளை, வழிப்பறி, செல்போன் - செயின் பறிப்பு, திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் ஆங் காங்கே நடைபெற்று வருகின்றன. குறிப்பாக செல்போன் பறிப்பு நிகழ்வுகள் அதிக அளவில் நடக்கின்றன.

இவ்வாறு திருடப்பட்டு கொண்டுவரும் செல்போன்களை சில செல்போன் கடை உரிமையாளர்கள் வாங்கி அதனை மீண்டும் விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து உடனடி விசாரணை நடத்த சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

அதன்படி, வட சென்னை காவல் கூடுதல் ஆணையர் ஆர்.தினகரன் மேற்பார்வையில் பூக்கடை துணை ஆணையர், 2 உதவி ஆணையர்கள், 8 ஆய்வாளர்கள் அடங்கிய 40 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் பாரிமுனையில் உள்ள பர்மா பஜாரில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அங்கிருந்து 330 திருட்டு போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில், 210 போன்கள் விலை உயர்ந்தவை. இதுதொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து தியாகராயநகரில் உள்ள சத்யா பஜாரில் நேற்று முன்தினம் தெற்கு மண்டல இணை ஆணையர் மகேஷ்வரி தலைமையிலான தனிப்படையினர் 33 கடைகளில் சோதனை நடத்தினர். இதில், 770 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில், 70 ஐ போன்கள். செல்போனில் உள்ள ஐஎம்இஐ (15 இலக்க ரகசிய எண்) தொழில் நுட்பத்தை மாற்றும் இயந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் நடத்தப்பட்ட விசாரணையில் தமிழகத்தில் திருடப்படும் செல்போன்கள் ஐஎம்இஐ தொழில் நுட்பத்தை மாற்றி அதை கேரளா மற்றும் வேறு சில மாநிலங்களில் விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இதுகுறித்து காவல் கூடுதல் ஆணையர் ஆர்.தினகரன் கூறும்போது, "செல்போன் பறிப்பு குற்ற நிகழ்வை முற்றிலும் தடுக்கவே தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை. முதல் கட்டமாக திருட்டு செல்போன்களை வாங்குவோரை கைது செய்து வருகிறோம். அதைத் தொடர்ந்து அவர்கள் மூலம் செல்போன் பறிப்பு திருடர்களை பிடிப்போம். திருட்டு செல்போன் என தெரிந்து வாங்குவோரும் கைது செய்யப்படுவார்கள்" என்றார்.

இடைத்தரகர்கள் மூலம் விற்பனை

திருடப்பட்ட செல்போன் விலை ரூ.10 ஆயிரம் என்றால், அதை ரூ.4 ஆயிரத்துக்கு கடை உரிமையாளர்கள் வாங்கி வந்துள்ளனர். அதன் பின்னர் அந்த போனில் சில மாற்றங்கள் செய்து அதை ரூ.7 ஆயிரத்துக்கு மீண்டும் விற்பனை செய்வதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், திருடப்பட்ட போன்களை பெரும்பாலும் நேரடியாக கடை உரிமையாளர்களிடம் திருடர்கள் கொடுப்பது இல்லையாம். மாறாக இடைத்தரகர்கள் மூலம் கைமாற்றுகின்றனர்.

இதனால், அவர்களின் உருவம் செல் போன் கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாவதில்லை. இருப் பினும் அவர்களை கைது செய்வோம் என தனிப்படை போலீஸார் தெரி வித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x