

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலை தொடர்பாக தமிழக அரசின் சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடக்கோரி கடந்த மே மாதம் நடைபெற்ற போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய தடியடி, துப்பாக்கி சூட்டில் 13 பேர் இறந்தனர். இதற்கிடையே, இந்த தொழிற்சாலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது.
பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு
இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தரப்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தது. மேலும், தொழிற்சாலையை ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்து உத்தரவிட்டது.
பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்தும், பசுமைத் தீர்ப்பாய விசாரணைக்கு தடை கோரியும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. தமிழக அரசின் மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்தது. இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தற்போது, சீராய்வு மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர்.