Last Updated : 19 Nov, 2018 09:44 AM

 

Published : 19 Nov 2018 09:44 AM
Last Updated : 19 Nov 2018 09:44 AM

போதை ஊசி போட்டுக்கொண்டு பெண்களுக்கு தொல்லை தரும் இளைஞர்கள்: அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

உடுமலையில் போதை ஊசி போட்டுக் கொண்டு பெண்களை தொந்தரவு செய்யும் இளைஞர் களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப் பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட தளி பிரதான சாலை, காவல் நிலையத்தை ஒட்டிய பெரியகடை வீதி ஆகியவற்றுக்கு நடுவே 19-வது வார்டு அமைந்துள் ளது. அங்கு பாண்டியர் சந்து, பூமாலை சந்து, மாயாண்டி சந்து, கம்பர் சந்து, விநாயகர் கோயில் சந்து, சண்முகவேல் சந்து உள்ளிட்ட குடியிருப்புகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

இப்பகுதியில் பல ஆண்டுகளாக மது அருந்துவோரின் தொல்லை யால் மக்கள் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், தற்போது போதை மருந்து பழக்கத்துக்கு அடிமையான இளைஞர்களின் தொல்லையும் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.

தாக்குதலுக்கு ஆளாகும் நிலை

இதுதொடர்பாக ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் பொதுமக்கள் கூறியதாவது: குடியிருப்பு பகுதி யில் தனியாருக்கு சொந்தமான காலியிடம் உள்ளது. அதன் உரி மையாளர் வெளியூரில் உள்ளார். பராமரிப்பின்றி புதர்மண்டிய இடம், விஷ ஜந்துக்களின் புகலிடமாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியில் நுழையும் நபர்கள், மக்கள் நடந்து செல்லும் பாதைகள், கோயில்கள், வீட்டு வாசல்கள், குடிநீர் தொட்டி மற்றும் காலியிடங்களை ஆக்கிரமித்து மது அருந்தும் இடமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சமீப காலமாக 15 முதல் 20 வய துக்கு உட்பட்ட வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. ஊசி மூலமாக போதை மருந்து உட்கொள்வது அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக கேட்டால் தகாத வார்த்தைகளால் பேசியும், தாக்கவும் முற்படுகின்ற னர். பெண்கள் பகலில்கூட தெருவில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள் ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

வீட்டு வாசலில் குடிமகன்கள்

அப்பகுதியைச் சேர்ந்த பூ விற்கும் பெண் ஜோதிலட்சுமி கூறும்போது, ‘டாஸ்மாக் கடை அருகே இருப்பதால், அடையாளம் தெரியாத பலர் பகலிலேயே குடித்துவிட்டு, வீட்டு வாசலில் வந்து படுக்கின்றனர். அசம்பாவிதம் நடந்துவிடுமோ என்ற அச்சம் குடியிருப்போர் மத்தியில் உள்ளது. இதுதொடர்பாக, கடந்த 14-ம் தேதி அமைச்சர் கே.ராதாகிருஷ்ணனிடம் புகார் தெரிவித்தோம். ஒருமாதத்துக்குள் டாஸ்மாக் கடை அகற்றப்படும் என தெரிவித்தார். அவரது நடவடிக்கைக்காக காத்திருக் கிறோம்’ என்றார்.

தெருவிளக்குகள் உடைப்பு

நரேஷ் என்பவர் கூறும்போது, ‘யாருடைய இடம் என்றே தெரி யாத காலியிடத்துக்கு வரும் இளை ஞர்கள், இருசக்கர வாகனங் களுக்கு பஞ்சர் ஒட்ட பயன்படுத்தப் படும் ‘சொல்யூசன்’ மற்றும் போதை மருந்துகளை பயன்படுத்துகின்ற னர்.

அவர்கள் பயன்படுத்திச் சென்ற மருந்துகள் மற்றும் ஊசிகள் அங்கு குவியல்களாக உள்ளன. சமூக விரோதிகளால் அடிக்கடி தெரு விளக்கு உடைக்கப்படுவதால், அப்பகுதியே இருளில் மூழ்கிவிடு கிறது. இதுதொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

கண்காணிப்பில்லை

நாகமாணிக்கம் என்பவர் கூறும் போது, ‘காவல் நிலையத்துக்கு அருகே நடைபெறும் அத்துமீறல் களை தடுக்க தவறியது ஏன்? என உயர் அதிகாரிகள் விசாரிக்க வேண்டும். தொடர் கண்காணிப்பு இல்லாததே இதற்கு காரணம். இதே நிலை தொடர்ந்தால், பொதுமக்களுடன் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்துள்ளோம்’ என்றார்.

நகராட்சி வசமாகும் காலி இடம்?

நகராட்சி ஆணையர் ஓ.ராஜாராம் கூறும்போது, ‘பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ள காலி இடத்தை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். உரிமை யாளருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்படும். பதில் ஏதும் இல்லாதபட்சத்தில், காலியிடம் நகராட்சி வசமாக்கப்படும். போதை மற்றும் குடிமகன்களின் தொல்லை குறித்து போலீஸார்தான் நடவ டிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

இதுகுறித்து காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திர னிடம் கேட்டபோது, ‘இதுகுறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கடும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x