

கஜா புயல் தாக்கியதில் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட சேதத்தை முழுமையாக மதிப்பீடு செய்து உரிய இழப்பீடு வழங்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும் படி, மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கஜா புயல் தாக்கியதில் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் பலத்த சேதத்தை சந்தித்துள்ளன. இந்த மாவட்டங்களில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் சேதங்கள் மதிப்பீடு செய்யப்படவில்லை எனவும், அவற்றை மதிப்பீடு செய்யக் கோரியும் சென்னை கொரட்டூரைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், புயல் காரணமாக தஞ்சையில் 83 கிராமங்களும், புதுக்கோட்டையில் 43 கிராமங்களும், நாகையில் 87 கிராமங்களும் பெருத்த சேதத்தை சந்தித்துள்ளன எனக் கூறியிருந்தார்.
இக்கிராமங்களில் 2 லட்சம் தென்னை மரங்கள் விழுந்து விட்டதாகவும், ஹெக்டேருக்கு 2.64 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளதாகவும், அது போதுமானதல்ல எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
பல கிராமங்களுக்கு நிவாரண உதவிகள் சென்றடையவில்லை என்பதால், அந்த கிராமங்களுக்கு உடனடியாக நிவாரணப் பொருட்களை வழங்க உத்தரவிட வேண்டும் எனவும், சேதத்தை முழுமையாக மதிப்பீடு செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வு, நிவாரண பணிகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் வரும் 29-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.