

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உருவச் சிலை வரும் டிசம்பர் 16 -ம் தேதி திறக்கப்படும் என, அக்கட்சி தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக திமுக தலைமைக்கழகம் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "மறைந்த தலைவர் கருணாநிதியின் உருவச் சிலையை வருகின்ற டிசம்பர் மாதம் 16 -ம் தேதி அகில இந்திய தலைவர்கள் பங்கேற்று சிறப்பாக திறந்து வைக்கவிருக்கிறார்கள்.
ஐந்து முறை முதல்வராக இருந்து தமிழகத்திற்கு எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றித் தந்து தமிழகத்தில் மட்டுமின்றி -உலகெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளங்களில் உன்னதமாக கொலுவீற்றிருக்கும் தலைவரின் உருவச் சிலை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழகம் அண்ணா அறிவாலயத்தின் முகப்பில் நிறுவப்படவுள்ளது.
புனரமைக்கப்பட்ட அண்ணா சிலையும் - கருணாநிதியின் சிலையும் ஒரே இடத்தில் அருகருகே அமைய உள்ளன. டிசம்பர் 16 ஆம் தேதி தலைவர் தலைவரின் உருவச் சிலை திறப்பு விழா, எழுச்சிமிகு விழாவாக நடைபெறும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.