Published : 21 Nov 2018 11:04 AM
Last Updated : 21 Nov 2018 11:04 AM

மூளைச்சாவு அடைந்தவரின் கை புதுவை இளைஞருக்கு பொருத்தம்: ஜிப்மர் மருத்துவர்கள் சாதனை 

பெங்களூரில் விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் கைகள், புதுச்சேரி இளைஞருக்கு பொருத்தப்பட்டுள்ளது. ஜிப்மர் மருத்துவர்கள் இம்முயற்சியை செய்துள்ளனர்.

புதுச்சேரியில் தொழிற்சாலை விபத்தில் இரு கைகளையும் இழந்த 32 வயது இளைஞர் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த 15-ம் தேதி 22 வயது பிஹார் இளைஞர் பெங்களூரில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்து அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது நிலை மோசமானதை அடுத்து தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு மூளைச் சாவு அடைந்தார்.

அவரது தந்தை காவலாளியாகவும், தாய் கூலித்தொழி லாளியாக உள்ளனர். அவர்கள் தங்கள் மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். இத்தகவல்கள் உறுப்பு தானம் தேவைப்படுவோர் பட்டியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டது.

அப்போது ஜிப்மர் மருத்துவமனையில் இரு கைகள் தேவைப்படும் விவரம் தெரிய வந்தது. பிஹார் இளைஞரின் கைகள் பெங்களூரிலிருந்து புதுச்சேரி கொண்டு வர முடிவு எடுக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து கடந்த 18-ம் தேதி பிஹார் இளைஞரின் கைகள் பிரித்து எடுக்கப்பட்டு, ஆம்புலன்ஸில் புதுச்சேரிக்கு கொண்டுவரப்பட்டது. சுமார் 307 கிமீ தொலைவு பயண விவரங்கள் பெங்களூர், தமிழகம், புதுச்சேரி போக்குவரத்து போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் விரைந்து வந்தது. புதுச்சேரி ஜிப்மரில் அறுவை சிகிச்சை தொடங்கியது.

கடந்த 18-ம் தேதி மாலை 5 மணிக்கு தொடங்கிய அறுவை சிகிச்சை, தொடர்ச்சியாக 9 மணி நேரம் 30 நிமிடங்கள் நடந்து அதிகாலையில் நிறைவடைந்தது. மொத்தம் 8 யூனிட் ரத்தம் இந்த அறுவை சிகிச்சையில் தேவைப்பட்டது.

அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் இரு கைகளின் செயல்பாட்டை ஜிப்மர் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x