Published : 08 Nov 2018 05:22 PM
Last Updated : 08 Nov 2018 05:22 PM

கர்நாடக இடைத்தேர்தல் தோல்வி பாஜகவின் வீழ்ச்சிக்கான எச்சரிக்கை மணி: கி.வீரமணி

கர்நாடக இடைத்தேர்தல் தோல்வி பாஜகவின் வீழ்ச்சிக்கான எச்சரிக்கை மணி என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கி.வீரமணி இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “அண்மையில் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிக் கூட்டணி 4 இடங்களில் பெரும் வெற்றி பெற்றது

ஷிமோகா நாடாளுமன்றத் தொகுதி ஒன்றில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது. ஏற்கெனவே எடியூரப்பா 3 லட்சத்து 63 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதி இது - அங்கும் சரிவுதான். இப்போது அவரது மகன் ராகவேந்திரா என்பவர் வெறும் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் அதே தொகுதியில் கடும் முயற்சிக்குப் பின்னரும் வெற்றி பெற்றிருக்கிறார் என்பது, கர்நாடகத்தில் பாஜகவுக்கு தோல்வி முகம் தொடர்கிறது என்பதையே காட்டுகிறது.

கர்நாடகாவில் தோல்விப் படலம்!

பெல்லாரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக 2004 முதல் வெற்றி பெற்ற ஒரு தொகுதி. 14 ஆண்டுகளாக அதன் வசம் இருந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வி.எஸ்.உக்ரப்பா வெற்றி பெற்றிருக்கிறார். அதுவும் 2.43 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில். மாண்டியா தொகுதியில் பாஜக வெற்றி என்பதுதான் இந்த 5 தொகுதி இடைத்தேர்தல்களில் அதற்குக் கிடைத்த ஆறுதல் பரிசு ஆகும்.

பெல்லாரி தொகுதியை எப்படியும் இம்முறை பாஜக தக்க வைத்துக் கொள்ளவேண்டும் என்று படாதபாடு பட்டது அக்கட்சி. அங்கு செல்வாக்குள்ளவராகக் கருதப்படும் பி.சிறீராமுலு போன்றவர்களே கடைசி நேரத்தில் களமிறக்கப்பட்டார்கள்.

தென்மாநிலங்களைக் குறி வைக்க பாஜக - மோடி - அமித்ஷா பல தனிக் குழுக்களை ஆதித்யா பிர்லா - அம்பானி போன்ற பல கார்ப்பரேட் முதலாளிகள் மற்றும் ஆர்எஸ்எஸ், பாஜக அறிவு ஜீவிகள் குழு - குறிப்பாக கேரளாவிலிருந்து கர்நாடகத்திற்கு மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு, பிரதமர் மோடியின் நெருக்கக் குழுவில் ஒருவராக உள்ள எம்.பி., போன்றவர்களிடம் தனிப் பொறுப்பே கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் அரசியல் ஊடகங்களில் பேச்சுகள் கசிந்துள்ளன.

ஆந்திரா - தெலங்கானாவில் நிலைமை என்ன?

ஆந்திராவில், பாஜக இனி எளிதில் பழைய செல்வாக்கைப் புதுப்பித்துக் கொள்ள முடியாது. தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசமும், காங்கிரசும் இணைந்து கூட்டணியாக இணைந்து சந்திரசேகர ராவையும், பாஜகவையும் எதிர்ப்பதால், இரண்டு கட்சிகளுக்கும் அதாவது,ஆளுங்கட்சிக்கும் பாஜகவுக்கும் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது.

கேரளாவில் மதவெறி ஆயுதம்!

கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற ஆணையை செயல்படுத்திக் கடமையாற்றும் கேரள மார்க்சிஸ்ட் அரசுக்கு எதிராக மத உணர்வை விசிறிவிட்டு, குளிர்காய நினைத்து திட்டமிட்டே பாஜக அங்கு மதக்கலவரங்களுக்குத் தூபம் போட ஏற்பாடு ஆன விஷயம் அங்குள்ள பாஜக தலைவர் ஒப்புதல் வாக்குமூலத்தின்படி அம்பலமாகி விட்டது.

கடல் வற்றிக் கருவாடு தின்னக் காத்திருந்த கொக்கு குடல்வற்றி இறந்த பழைய உவமையை நினைவூட்டுவதாக உள்ளது பரிதாபத்திற்குரிய பாஜக நிலை.

தமிழ்நாட்டின் நிலைமை!

தமிழ்நாட்டில் தூண்டிலைத் தூக்கி அலைகிறார்கள் திரைப்பட நடிகர்களின் அரசியல் கட்சி. ஒரு கட்சி கருவிலேயே இருக்கிறது எப்போது பிறக்கும் என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கும் தெரியாத புதிராக இருக்கும்போது, அதனைத் தூக்கிக் கொஞ்சி மகிழுவதுபோல, காட்டி வாக்குகளைக் கவர முயற்சிக்கிறார்கள். குழந்தை கழுத்தில் உள்ள செயினைக்கூட கவரத் துடிப்பவர்களைப்போல, அரசியல் தரகர்கள் மூலம் செய்த முயற்சிகள் வெற்றியைத் தருவதாகத் தெரியவில்லையே என்ற ஆதங்கம் பாஜகவின் தேசியத் தலைமையை வாட்டி வதைக்கிறது.

தமிழ்நாட்டில் பாஜகவுடன் கூட்டு என்றாலோ ஓட்டம் பிடிப்பவர்களாகவே அத்தனைக் கட்சிகளும் உள்ளன. வேண்டுமானால், சில கூலிப் படைக் கட்சிகள் அகப்படக்கூடும். காரணம், இங்குள்ள பெரிய கட்சிகளோடு போட்டியிடும் நிலையில் இல்லை. தமிழ்நாட்டில் என்னதான் ஊடகங்களால் ஊதிப் பெருக்கம் நடைபெற்ற போதிலும்கூட பாஜக போட்டி போடுவது நோட்டாவுடன் மட்டுமே.

இது பெரியார் மண்தான். திராவிட பூமிதான் என்பதை மாற்றிட எவ்வளவு பெரிய வித்தைகள் செய்தாலும் நடக்காது, பிழைக்காது. என்றாலும், இங்குள்ள முக்கிய அரசியல் கட்சிகள் குறிப்பாக மதச்சார்பின்மை சமூக நீதியில் நம்பிக்கையுள்ள கட்சிகள், மக்கள் விரோத பாஜக ஆட்சி அகற்றப்படவேண்டும் என்று உண்மையிலேயே கருதுபவர்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் தன்முனைப்புக்கு இடம் தராமல், பொதுநோக்கம் நிறைவேறிட, பொது எதிரியை வீழ்த்திடுவது முக்கியம் என்பதை உணர்ந்து, அதற்கேற்ப நடந்துகொள்வது மிகவும் அவசர அவசியம்.

பொருளாதாரத்தில் மாபெரும் வீழ்ச்சி - சிக்கல்!

கர்நாடக இடைத்தேர்தல் முடிவு பாஜகவுக்கு ஒரு எச்சரிக்கை மணி. பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவுக்குப்பின் பொருளாதாரம் மட்டுமல்ல அதைக் காப்பாற்ற வேண்டிய, ஒழுங்குபடுத்த வேண்டிய ரிசர்வ் வங்கி போன்ற மத்திய வங்கிகளும்கூட பாஜக, மோடி அரசின் தாக்குதலுக்கு ஆளாகாமல் தப்ப முடியவில்லை.

விண்ணை முட்டும் விலைவாசி, உச்சமான வேலையில்லாத் திண்டாட்டம், பெட்ரோல், டீசல் விலைகளின் விலையேற்றங்கள் - விவசாயிகளின் தற்கொலை; பல்லாயிரக்கணக்கில் கல்வித் துறையில் காவி மயம் இப்படி எல்லாவற்றிலும், எல்லா தரப்பு மக்களின் ஏமாற்றத்திற்கும் ஆளாகி, எதிர்ப்பையும், அதிருப்தியையும் சந்திக்கிறது மோடி அரசு.

மக்கள் கடும் கோபத்துடன் உள்ளனர் என்பதைப் புரிந்துகொள்ளாமல், மகுடி வாசிப்பது பயன்படாது” என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x