Published : 19 Oct 2018 04:37 PM
Last Updated : 19 Oct 2018 04:37 PM
கடற்கரையில் சிறுநீர் கழிப்போரை வீடியோ எடுத்து ட்விட்டரில் கிரண்பேடி பதிவிட்டுள்ளார். அத்துடன் குப்பை வீசினாலோ, சிறுநீர் கழித்தாலோ அபராதம் விதிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தூய்மை திட்டத்துக்கு மிகுந்த முக்கியத்துவத்தை அளித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை கடற்கரையில் நடைபயிற்சி சென்றபோது அப்பகுதிஅசுத்தமாக இருந்ததால் அதைத் தூய்மை செய்ய உத்தரவிட்டார். அவரும் தூய்மை செய்யும் பணியைத் தொடங்கினார். பின்னர் வீடியோ எடுக்கத் தொடங்கினார்.
கடற்கரையில் தூய்மைப் பணியை மேற்கொண்டபோது, கடற்கரையில் குவிக்கப்பட்டுள்ள கற்களுக்கு இடையில் இளைஞர் ஒருவர் சிறுநீர் கழிப்பதைப் பார்த்து, ஆளுநர் கிரண்பேடி கோபமடைந்து அதை வீடியோ எடுக்கத் தொடங்கினார்.
அவர் கடற்கரை கல் பரப்பில் இருந்து மேலே ஏறி வரத்தொடங்கியதை வீடியோ எடுத்து பொது இடத்தில் சிறுநீர் கழிப்பது தொடர்பாக கேள்வி எழுப்பினார். இறுதியில் மன்னிப்பு கோரியவுடன் அவரை அனுப்பி வைத்தார். அதேபோல் சிறுநீர் கழிக்கும் மற்றொரு நபரை அழைத்து விசாரித்தார். அவர் கையைக் கூப்பி மன்னிப்பு கோரியவுடன் விட்டார். அதைத்தொடர்ந்து இவ்வீடியோக்களை ட்விட்டரிலும் பதிவிட்டுள்ளார்.
மேலும் இனி கடற்கரையில் குப்பை வீசினாலும், இயற்கை உபாதைகளைக் கழித்தாலும் அபராதம் விதிக்கும்படியும் அதிகாரிகளுக்கு ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT