Published : 26 Oct 2018 05:07 PM
Last Updated : 26 Oct 2018 05:07 PM

தீவுத்திடலில் உரிய பாதுகாப்பு ஏற்பாட்டுடன் பாட்டாசு கடை: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

மக்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதால் தீவுத் திடலில் பட்டாசு கடைகளுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்திய பின்னர் பட்டாசு விற்பனையை தொடங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சூளைமேட்டைச் சேர்ந்த எம்.முனியன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அவரது மனுவில்,

“கடந்த 2010 முதல் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.

பட்டாசு விற்பனைக்காக கடைகள் டெண்டர் விடப்படும். இதற்கான வழிமுறைகளை உருவாக்கி சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2013-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.

அதன் அடிப்படையில், தீவுத் திடலில் பட்டாசு விற்பனைக்கான டெண்டர் எடுத்தவர்கள் தற்காலிக கடைகளை அமைக்க சென்னை போலீஸ் கமிஷனரிடம் அனுமதி பெற வேண்டும்.

ஒவ்வொரு கடையும் தனித்தனியாக ஒரே வரிசையில் அமைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு கடைக்கும் 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். தீப்பிடிக்காத வகையில் மிகவும் பாதுகாப்பான முறையில் கடைகள் அமைக்கப்பட வேண்டும்.

விபத்து நேர்ந்தால் உடனடியாக வெளியேறும் வகையில் அவசர வழி, ஆம்புலன்ஸ் வசதி, முதல் உதவி கவுண்டர்கள் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கடைகள் அமைக்கப்படவுள்ள தீவுத் திடலின் மற்றொரு பக்கம் பொருட்காட்சி, ஓட்டல்கள் போன்றவைகள் உள்ளன. இந்த இடத்திலிருந்து பட்டாசு விற்பனைக்காக ஒதுக்கப்படும் இடத்திற்கும் குறைந்தது 70 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.

இதை தீயணைப்பு துறை அதிகாரிகளும், சுற்றுலாத்துறை அதிகாரிகளும் ஆய்வு செய்து அனுமதி அளிக்க வேண்டும். ஆனால், இந்த விதிமுறைகள் எதையும் ஒழுங்காக கடைபிடிக்காமல் பட்டாசு கடைக்கு சென்னை மாநகராட்சி, போலீசார், தீயணைப்புத் துறை, சுற்றுலாத்துறை, மற்றும் வெடிபொருள் தடுப்பு துறை அதிகாரிகள் அனுமதி அளித்து வருகிறார்கள். இதனால், விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி வரும் 19-ம் தேதி முதல் 20 நாட்கள் தீவுத் திடலில் பட்டாசு கடைகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்கக்கோரி கடந்த கடந்த செப்டம்பர் மாதம் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தேன்.

அதன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, உரிய பாதுகாப்பு வழிமுறைகளின்படி பட்டாசு கடைகளுக்கு அனுமதி அளிக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும்.” என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இதற்கு பொருப்பான சுற்றுலாத்துறை சார்பில் தீவுத்திடலில் கடைகள் அமைக்கப்பட உள்ளதற்கான வரைபட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மக்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதால் தீவுத் திடலில் பட்டாசு கடைகளுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்திய பின்னர் பட்டாசு விற்பனையை தொடங்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x