Published : 11 Oct 2018 07:54 PM
Last Updated : 11 Oct 2018 07:54 PM
மின்சார ரயில்களில் தானியங்கி கதவுகள் பொருத்த ரூ.3500 கோடி செலவாகும் என்பதால், தற்போது அது சாத்தியமில்லை. புதிதாகத் தயாரிக்கப்படும் பெட்டிகளில் கதவுகளைப் பொருத்துவது குறித்து ரயில்வே வடிவமைப்பு வாரியம்தான் முடிவெடுக்க வேண்டும் என தெற்கு ரயில்வே, உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
சென்னை பரங்கிமலையில் மின்சார ரயில் விபத்தில் சிக்கி ஆறு பேர் பலியானதை அடுத்து, மெட்ரோ ரயில்களைப் போன்று சென்னையில் இயக்கப்படும் அனைத்து மின்சார ரயில்களின் பெட்டிகளிலும் தானியங்கி கதவுகளைப் பொருத்த ரயில்வே துறைக்கு உத்தரவிட வேண்டுமென வழக்கறிஞர் சதீஷ் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், மின்சார ரயில்களில் தானியங்கி கதவுகள் பொருத்துவது குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இன்று இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தெற்கு ரயில்வேயின் துணை முதன்மை மின் பொறியாளர் அனில்குமார் பாஞ்சியாரின் அறிக்கையை ரயில்வே வழக்கறிஞர் ராம்குமார் தாக்கல் செய்தார்.
’’சென்னையில் இயங்கும் மின்சார ரயில்களில் தானியங்கி கதவுகள் பொருத்த 3500 கோடி ரூபாய் செலவாகும் என்பதால் தற்போதைக்கு சாத்தியமில்லை. புதியதாக தயாரிக்கப்படும் ரயில் பெட்டிகளில் மட்டுமே தானியங்கி கதவுகள் பொருத்த முடியும். தானியங்கி கதவுகள் பொருத்தும் பட்சத்தில் ரயில்களில் காற்றோட்டம் இருக்காது.
தானியங்கி கதவுகள் பொருத்தினால் குளிர்சாதன வசதி செய்ய வேண்டியிருக்கும். சென்னை ரயில்களில் உள்ள கூட்ட நெரிசல், பருவ நிலை மாற்றம் ஆகியவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும். மும்பையில் 6 மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட தானியங்கி கதவுகள் கொண்ட பெட்டிகள் கொண்ட ரயில்களில் பயணம் செய்வதற்கான கட்டணம் சென்னையை விட 10 மடங்கு அதிகமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.
அனைத்து ரயில்களிலும் தானியங்கி கதவு பொருத்துவதற்கு ரூ.3500 கோடி செலவாகும் என்பதால் இப்போது சாத்தியமில்லை. வடிவமைப்பை மாற்றியமைக்க டெல்லியில் உள்ள ரயில்வே வாரியமும், லக்னோவில் உள்ள ரயில்வே வடிவமைப்பு கழகமும் இணைந்து முடிவு செய்ய வேண்டும். அதைப் பொறுத்து வடிவங்களை மாற்றலாமா, வேண்டாமா என முடிவெடுப்பது தெற்கு ரயில்வேயின் கொள்கை முடிவு சார்ந்த விஷயம்’’ என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை நவம்பர் மாதம் 12 -ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT