Published : 12 Oct 2018 04:03 PM
Last Updated : 12 Oct 2018 04:03 PM
நெடுஞ்சாலை துறை டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக திமுக தொடர்ந்த வழக்கில் முகாந்திரம் இல்லை என்று லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்திருந்த நிலையில் வழக்கை சிபிஐ விசாரித்து 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் எடப்பாடி டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று பதில் அளித்துள்ளது.
இந்த வழக்கு மூன்று நாட்களுக்கு முன் விசாரணைக்கு வந்தபோது ஆர்.எஸ்.பாரதி அளித்த புகாரில் என்ன முடிவெடுக்கப்பட்டுள்ளது, உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரிக்கப்பட்டதா என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், நெடுஞ்சாலை துறை டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு ஏதும் நடைபெறவில்லை என்றும், முதல்வர் பழனிசாமி மீதான திமுக புகாரின் ஆரம்பகட்ட விசாரணையிலேயே முகாந்திரம் இல்லை என்பதால் மேற்கொண்டு யாரிடமும் விசாரணை நடத்த தேவையில்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நெடுஞ்சாலை துறையும், லஞ்ச ஒழிப்புத்துறையும் முதல்வரின் கட்டுப்பாட்டில்தானே உள்ளது என நீதிபதி கேள்வி எழுப்பிய போது, லஞ்ச ஒழிப்பு துறையானது தன்னிச்சையாக செயல்படக்கூடிய அமைப்பு என்றும், இது உள்துறையின் கீழ் வராது என்றும், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையின் கீழ் வருவதால் முதல்வருக்கோ, டிஜிபி-க்கோ தெரிவிக்க அவசியம் இல்லை என்றும், மாநில ஊழல் கண்காணிப்பு ஆணையரிடம் தெரிவித்தால் போதும் என லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, மாநில ஊழல் கண்காணிப்பு ஆணையரை யார் நியமிப்பது என்று கேள்வி எழுப்பியபோது, மூத்த கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரியை அரசு நியமிக்கும் என லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதையடுத்து இன்று மீண்டும் வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டார். மேலும், வழக்கு ஆவணங்களை, ஒரு வாரத்தில் சிபிஐயிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒப்படைக்க வேண்டும்.
ஆரம்ப கட்ட விசாரணையை 3 மாதத்தில் சிபிஐ முடிக்க வேண்டும். வழக்கில் முகாந்திரம் இருந்தால் சம்பந்தப்பட்டவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT