Published : 09 Oct 2018 11:55 AM
Last Updated : 09 Oct 2018 11:55 AM
கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபாலை வழக்கறிஞர் என்கிற முறையில் சந்திக்க அனுமதி மறுத்ததால், தர்ணாவில் ஈடுபட்ட வைகோவை போலீஸார் கைது செய்தனர்.
ஆளுநரை விமர்சித்து நக்கீரன் வார இதழில் எழுதியதாக சென்னை விமான நிலையத்தில் வைத்து நக்கீரன் இதழ் ஆசிரியர் கோபால் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவரைக் கைது செய்த போலீஸார் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நக்கீரன் கோபால் கைதைக் கண்டித்தார். ''பத்திரிகைகளில் எழுதுவதை வைத்து வழக்கு போடுவார்கள். கைது செய்வது வினோதமாக உள்ளது. ஆளுநர் ஆட்சியில் இதுபோன்ற விவகாரங்கள் நடக்கிறது. ஆளுநரே தேவை இல்லை என்பதுதான் எங்களது நிலைப்பாடு'' என்று வைகோ தெரிவித்தார்.
இந்நிலையில் சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு வந்த வைகோ அங்கிருந்த போலீஸாரிடம் வழக்கறிஞர் என்கிற முறையில் கோபாலைச் சந்திக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். நான் வழக்கறிஞர் என்னுடைய அடையாள அட்டை இதோ என காவல அதிகாரிகளிடம் காட்டினார்.
போலீஸார் அவரை அனுமதிக்க மறுத்தனர். அப்போது காவல் அதிகாரிகளுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நீதிமன்றக் காவலுக்கு அழைத்துச் செல்லும் நிலையில் உள்ளதால் அனுமதி அளிக்க முடியாது என போலீஸ் அதிகாரிகள் மறுத்தனர்.
இதையடுத்து துணை ஆணையர் அலுவலகம் முன் வைகோ தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறைப் பணிக்கு இடையூறு விளைவிப்பதாகக் கூறி வைகோவை போலீஸார் கைது செய்து வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT