Published : 13 Oct 2018 09:15 AM
Last Updated : 13 Oct 2018 09:15 AM

சபரிமலைக்கு நாங்கள் செல்ல மாட்டோம்: ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் பெண்கள் உறுதி

சபரிமலைக்கு செல்ல மாட்டோம் என்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் பெண்கள் சத்திய பிரமாணம் எடுத்து கொண்டனர்.

அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்தநிலையில், சென்னை வள்ளூவர் கோட்டம் அருகே சபரிமலை ஐயப்ப சேவை சமாஜம் சார்பில் சத்திய பிரமாணம் ஏற்கும் நிகழ்வு நடந்தது.

இதில், 100க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் பங்கேற்று சபரிமலையில் கடை பிடித்து வரும் ஆசார அனுஷ் டானங்களை மீறி சபரிமலைக்கு செல்ல மாட்டோம் என்று சத்திய பிரமாணம் செய்தனர்.

இந்த போராட்டத்தில் பங்கேற்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை பேசியதாவது:

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பெண்களுக்கான உரிமை அல்ல. தண்டனை. ஒட்டுமொத்த பெண்களும், ஐயப்ப பக்தர்களும் தீர்ப்புக்கு எதிராக உள்ளனர். பண்பாட்டை காப்பாற்ற தங்களது உயிரை கூட போக்க கூடியவர்கள் தான் இந்து மதத்தினர். தூங்கி கொண்டிருந்த நம்மை தட்டி எழுப்பியுள்ளது இந்த தீர்ப்பு. வாக்கு வங்கி அரசியலுக்காக சிறுபான்மையினரை தமிழக அரசியல் கட்சிகள் அனுசரித்து வருகின்றனர். கோயில் நம் பிக்கை இல்லை என்று கூறும் அவர்களுக்கு கருத்து கூற கூட உரிமையில்லை.

தமிழகத்தில் இந்து மதம் சார்ந்த விழாக்களுக்கு முட்டுக்கட்டை போடப்படுகிறது. இனி தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் விநாயகர் ஊர்வலம் செல்லும். இந்துகளுக்கு ஆதரவு இல்லை என கூறும் கட்சிகளுக்கு இந்துக்கள் ஒரு ஓட்டு கூட போடக்கூடாது.

இந்து ஓட்டு இந்து அமைப்பினருக்கு தான் விழ வேண்டும். அன்று ஆண்டாளை பழித்தவருக்கு இன்று ஆண்டாள் துரத்தி துரத்தி அடிக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பேசுகையில் "தற்போது நடைபெறுவது ஜல்லிக்கட்டு அல்ல.. பள்ளிக்கட்டு போராட்டம். இந்துக்கள் ஒற்றுமையாக இருந்தால் சீராய்வு மனு விசாரணையில் நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.

சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் மாநில தலைவர் ஏ.எம்.ரத்தினம் பேசுகையில்" சபரிமலை விவகாரம் தொடர்பாக பிரதமரை சந்திப்போம். குடியரசுத் தலைவரையும் சந்தித்து அவசர சட்டம் கொண்டு வர வலியுறுத்துவோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x