Published : 31 Oct 2018 02:35 PM
Last Updated : 31 Oct 2018 02:35 PM
முதலாவது ராஜேந்திர சோழனின் மனைவி ராணி வீரமாதேவியின் வரலாற்றைச் சித்தரிக்கும் ‘வீரமாதேவி’ படத்தில் வீரமாதேவி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை சன்னி லியோனை நீக்கக் கோரிய வழக்கினை மனுதாரர் வாபஸ் பெற்றதால் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை செல்லூரைச் சேர்ந்த சரவணன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
“முதலாவது ராஜேந்திர சோழனின் மனைவி ராணி வீரமாதேவி. சிறந்த பெண் போர் வீரர். கணவரின் இறப்புக்குப் பிறகு வீரமாதேவி, சதி எனும் உடன்கட்டை ஏறினார். அவரது வரலாற்றைச் சித்தரிக்கும் வகையில் 'வீரமாதேவி' என்ற பெயரில் படம் தயாரிக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படவுள்ளது. இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்தில் வீரமாதேவி கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் நடித்துள்ளார்.
சன்னி லியோனின் ஆபாசப் படம் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. இப்போதும் இணையதளத்தில் அவரது ஆபாசப் படங்கள் உள்ளன. ஆபாசப் படத்தில் நடித்ததற்காக சிறந்த ஆபாசப் பட நடிகை விருது சில ஆண்டுக்கு முன்பு சன்னிலியோனுக்கு வழங்கப்பட்டது. இவர் வீரமாதேவியாக நடிப்பது வீரமாதேவியை அவமானம் செய்வதாகும்.
முதலாம் ராஜேந்திர சோழனுக்கும், அவரது மனைவி வீரமாதேவிக்கும் தமிழகத்தில் பல இடங்களில் கோயில்கள் கட்டி பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். வீரமாதேவி படத்தில் சன்னி லியோன் நடிப்பதற்கு எதிராக கர்நாடகாவில் போராட்டம் நடத்தப்படுகிறது. அங்கு பலர் போலீஸில் புகார் அளித்துள்ளனர். இப்புகாரின் பேரில் போலீஸார் சன்னி லியோன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். எனவே சன்னி லியோனை 'வீரமாதேவி' படத்தில் இருந்து நீக்கவும், படப்பிடிப்பை நிறுத்தவும், படத்தை வெளியிடவும் தடை விதித்து உத்தரவிட வேண்டும்” இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று (புதன்கிழமை) நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ் குமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. நடிகர் சிவாஜி கணேசன் வீரபாண்டிய கட்டபொம்மன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுபோலவே நடிகை சன்னி லியோன் வீரமாதேவியாக கதாபாத்திரத்தில் மட்டுமே நடிக்கிறார் என நீதிபதிகள் கூறினர்.
நடிகர், நடிகைகள் எந்தக் கதாபாத்திரத்தில் வேண்டுமானாலும் நடிக்கலாம். இம்மனு பொதுநல வழக்கில் வராது. இதுபோன்ற மனுக்களை ஏன் தாக்கல் செய்கிறீர்கள்? என நீதிபதிகள் கேட்டனர். இதனையடுத்து மனுதாரர் வழக்கினை வாபஸ் பெறுவதாக கூறியதையடுத்து மனுவினைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT