Published : 19 Oct 2018 04:25 PM
Last Updated : 19 Oct 2018 04:25 PM

குப்பைத் தொட்டியில் இறந்து கிடந்த குழந்தை: கொன்றது யார்? வேளச்சேரி கொடூர சம்பவத்தில் 3 பேர் கைது

சென்னையை அடுத்த வேளச்சேரியில் உள்ள கன்னிகாபுரத்தில் அம்மா உணவகம் அருகே குப்பைத்தொட்டியில் கடந்த 17ம் தேதி பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து கிண்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் குழந்தையைக் கொன்று குப்பைத்தொட்டியில் வீசியது பெற்ற தாய்தான் என்ற அதிர்ச்சித் தகவல் தெரியவந்தது. இவர் பெயர் வசந்தி. இதில் இவருக்கு உதவியாக இவரது தாயார் விஜயாவும் வசந்தியின் ஆண் நண்பர் ஜெபராஜ் என்பவரும் இருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இவர்கள் 3 பேரையுமே போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் வசந்தியிடம் விசாரணை நடத்தியதில் அவர் கூறியதாவது:

தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த போது எனக்கும் ஜெபராஜூக்கும் காதல் ஏற்பட்டது. நெருங்கி பழகியதால் நான் கர்ப்பம் அடைந்தேன். இதனை வீட்டுக்கு தெரியாமல் மறைத்தேன். 7 மாதத்துக்கு பின்னர் நான் கர்ப்பமாக இருப்பது வீட்டுக்கு தெரிந்தது.

இதனை தாய் விஜயா கண்டித்தார். மேலும் திருமணத்துக்கு முன்பு குழந்தை பெற்றால் அக்கம் பக்கத்தினர் என்ன நினைப்பார்கள் என்று கூறி இதனை வெளியில் தெரியாமல் மறைக்க முடிவு செய்தார்.

இதையடுத்து என்னை வீட்டில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. கடந்த மாதம் எனக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனை அறிந்தால் உறவினர்கள் கிண்டல் செய்வார்கள் என்று நாங்கள் நினைத்தோம்.

எனவே குழந்தையை கொன்று குப்பைத் தொட்டியில் வீச முடிவு செய்தோம். இதுபற்றி காதலன் ஜெபராஜுக்கு தெரிவித்தோம். அவரும் இதற்கு ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து கடந்த 16-ந்தேதி குழந்தையை தண்ணீர் வாளிக்குள் அமுக்கி கொன்றோம். பின்னர் குழந்தையின் உடலை குப்பைத் தொட்டியில் வீசினோம். போலீசாரிடம் சிக்கமாட்டோம் என்று நினைத்தோம், என்று தன் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x