Published : 08 Oct 2018 10:10 PM
Last Updated : 08 Oct 2018 10:10 PM

திருப்பதி கோயில் காணிக்கை குறித்த சர்ச்சைப் பேச்சு: எஸ்.ஏ.சந்திரசேகர் மீதான புகாரை 3 மாதத்தில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு

இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தியது தொடர்பான புகாரில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீதான புகாரில் மூன்று மாதத்தில் விசாரணையை முடிக்க விருகம்பாக்கம் காவல் நிலையத்திற்கு சென்னை செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதத்தில் சென்னையில் நடைபெற்ற பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட எஸ்.ஏ.சந்திரசேகர், திருப்பதி கோயிலுக்கு காணிக்கை செலுத்துவதை கடவுளுக்கு லஞ்சம் கொடுப்பது என விமர்சித்தார்.

இது இந்துக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் வகையில் இருப்பதாக இந்து மக்கள் முன்னணி அமைப்பாளர் வி.ஜி.நாராயணன் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட விருகம்பாக்கம் காவல் நிலையத்தினர் டிசம்பர் 31-ம் தேதியன்று வழக்குப் பதிவு செய்தனர். ஆனால்.  இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், மூன்று மாதத்தில் விசாரணையை முடித்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய விருகம்பாக்கம் காவல் நிலையத்தினருக்கு உத்தரவிட்டார்.

இதற்கிடையில், நாராயணன் புகாரில் பதிவான வழக்கில் முன் ஜாமீன் கோரி எஸ்.ஏ.சந்திரசேகர் மனுத்தாக்கல் செய்தார். இவ்வழக்கை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சுபாதேவி எஸ்.ஏ.சந்திரசேகருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x