Last Updated : 20 Oct, 2018 12:34 PM

 

Published : 20 Oct 2018 12:34 PM
Last Updated : 20 Oct 2018 12:34 PM

திண்டிவனம் அருகே விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு; உயிர் தப்பிய ஒரு வயது குழந்தை

திண்டிவனம் அருகே சாலையோரம் நின்றுகொண்டிருந்த சரக்கு லாரி மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை குன்றத்தூரைச் சேர்ந்தவர் விஜயகுமார் (29). இவர் தனது ஒரு வயது குழந்தை ஞானிக்கு குடும்பத்தினருடன் தேனி மாவட்டத்திலுள்ள குலதெய்வம் கோயிலில் காது குத்தியுள்ளனர். பிறகு தொடர் விடுமுறை என்பதால், ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இன்று (சனிக்கிழமை) காலை இரண்டு கார்களில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தனர். அப்போது சாரம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது கார் மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த விஜயகுமார், அவரது மனைவி சபரி (25), சபரியின் தாயார் ராமலட்சுமி (45) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு திண்டிவனம் டி.எஸ்.பி திருமால் தலைமையிலான போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த சென்னை குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜான்சன் சாமுவேல் (28), அவர் மனைவி அன்சி (24) பூசாரி கவுண்டன்பாளையத்தைச் சேர்ந்த அருண்குமார் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து ஒலக்கூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் லாரி டிரைவரான மதுரை, மேலூர் தாலுகா வீரசுதாமணி பட்டியைச் சேர்ந்த ஜெயராஜை போலீஸார் கைது செய்தனர். இவ்விபத்தில் ஒரு வயது குழந்தை ஞானி காயமின்றி உயிர் தப்பினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x