Published : 07 Aug 2014 08:02 AM
Last Updated : 07 Aug 2014 08:02 AM

இஸ்ரேலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து பாலஸ்தீன அரசுக்கு இந்தியா உதவ வேண்டும்: ‘ஹார்மனி இந்தியா’ அமைப்பு தலைவர் ‘இந்து’ என்.ராம் வேண்டுகோள்

‘இஸ்ரேலுக்கு தனது கடும் கண்டனத்தை இந்தியா பதிவு செய்வதுடன், பாலஸ்தீன அரசுக்கு உரிய உதவிகளை அளிக்க வேண்டும்’’ என்று ஹார்மனி இந்தியா அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

பாலஸ்தீனர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் போரைக் கண்டித்து, ஹார்மனி இந்தியா அமைப்பின் சார்பில், ஒருமைப் பாடு, அமைதி மற்றும் மதச் சார்பின்மைக்கான கருத்தரங்கு, சென்னை புதுக்கல்லூரியில் புதன்கிழமை நடந்தது. இந்த அமைப்பின் தலைவர் ‘இந்து’ என்.ராம், ஹார்மனி இந்தியா அமைப்பின் பொதுச் செயலாளர் ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி, காந்தியின் பேரனும் மேற்கு வங்க முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி, கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில பொதுச் செயலாளர் உ.வாசுகி, மியாசி கல்வி அறக்கட்டளைத் தலைவர் முகமது கலீலுல்லா, பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா, ஆற்காடு இளவரசர் முகமது அப்துல் அலியின் மகன் முகமது ஆசிப் அலி, வழக்கறிஞர் காந்தி, மனோன்மணியம் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் வசந்தி தேவி மற்றும் வழக்கறிஞர் கே.எம்.ஆசிம் ஷேஹ்ஸாத் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு, அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். முன்னதாக பாலஸ்தீனப் போர் பாதிப்புகள் குறித்த உருக்கமான வீடியோ படம் திரையிடப்பட்டது. கூட்டத்தில் ‘இந்து’ என்.ராம் பேசியதாவது:

உலகின் அனைத்து சட்டங்களை யும், மனித உரிமை விதிகளையும் மீறி, பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் மிகப்பெரிய இன அழிப்பை, கொலைக் குற்றத்தை செய்து கொண்டிருக்கிறது. அங்குள்ள அப்பாவி மக்களுக்கு வாழும் உரிமை கிடைக்கவும், இன, மத, மொழிகளுக்கு அப்பால் பாலஸ்தீனர்களுக்கு அமைதியான சுதந்திர நாடு கிடைக்கவும், அனைத்து நாடுகளும் மக்களும் போராட வேண்டும்.

இதற்காக ஹார்மனி இந்தியா அமைப்பின் சார்பில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. பாலஸ்தீனத்தில் கொடுமையான குற்றங்களை செய்யும் இஸ்ரேலை, இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. இஸ்ரேல் மீது ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக நாடுகள் நடவடிக்கை எடுப்பதுடன், பாலஸ்தீனர்களுக்கு அமைதியான, சுதந்திர நாடு கிடைக்க உதவ வேண்டும். இந்தப் பிரச்சினையில் இஸ்ரேலுக்கு தனது கடும் கண்டனத்தை இந்தியா பதிவு செய்வதுடன், பாலஸ்தீன அரசுக்கு உரிய உதவிகளை அளிக்க வேண்டும்.

பாலஸ்தீனத்தில் நடக்கும் மனித உரிமைக்கு எதிரான போரைக் கண்டித்து, அனைத்து மதச்சார்பற்ற அமைப்புகளும் ஓரணியில் திரண்டு போராட முன்வர வேண்டும்.

இவ்வாறு `இந்து' என்.ராம் பேசினார்.

கோபால கிருஷ்ண காந்தி பேசும் போது, ‘‘தூங்கும் குழந்தைகளைக் கூட இஸ்ரேல் ராணுவம் விட்டு வைக்கவில்லை. இதை விட இஸ்ரேலுக்கு அவமானமான செயல் வேறு எதுவும் இல்லை என்பதை ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் பான் கி மூனே தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் உலக மக்கள் ஒவ்வொருவரும் அமைதியை கலைத்து, உண்மைகளை வெளிக்கொண்டு வர வேண்டும்’’ என்றார்.

டி.எம்.கிருஷ்ணா பேசும் போது, ‘எங்கோ இந்த பிரச்சினை நடக்கிறது என்று, மனிதனாகப் பிறந்த நாம் ஒதுங்கி இருப்பது மிக மோசமான செயல்’ என்றார்.

நவாப் அப்துல் அலி பேசும் போது, ‘‘மதங்களைத் தாண்டி மனித உயிர்கள் மீதான இந்தத் தாக்குதலை இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாது’’ என்றார்.

மேலும், மாதர் சங்க பொதுச் செயலாளர் வாசுகி, முகமது ஆசிப் அலி உள்பட பலரும் இஸ்ரேலைக் கண்டித்து பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x