Published : 01 Oct 2018 08:09 AM
Last Updated : 01 Oct 2018 08:09 AM
சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:
தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில், வரும் 6-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது, அதற்கு அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அந்த காற்றழுத்த தாழ்வு மண்ட லம் வட மேற்கு திசையில் ஓமனை நோக்கி நகரும் என எதிர் பார்க்கப்படுகிறது.
தென்மேற்கு வங்கக் கடல் முதல் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதி வரை கடலோர கர்நாடகம், இலங்கை, குமரிக்கடல், உள் தமிழகம், வடக்கு கேரளா ஆகிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது. மேலும் மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கடலோர கர்நாடக பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
அதன் காரணமாக அடுத்த இரு நாட்களுக்கு தமிழகத்தின் உள்பகுதியில் சில இடங்களிலும், கடலோர தமிழகம் மற்றும் புதுச் சேரியில் ஓரிரு இடங்களிலும் மித மான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டம் நிலக் கோட்டை, கோவை மாவட்டம் வால்பாறை ஆகிய இடங்களில் தலா 8 செமீ, மதுரை மாவட்டம் மேட்டுப்பட்டியில் 7 செமீ, தேனி மாவட்டம் பெரியகுளம், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஆகிய இடங்களில் 5 செமீ, நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் 4 செமீ மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT