Last Updated : 24 Oct, 2018 11:27 AM

 

Published : 24 Oct 2018 11:27 AM
Last Updated : 24 Oct 2018 11:27 AM

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கு கொலை மிரட்டல்; சிபிசிஐடி விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கை விசாரித்து வரும் நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்ததை சிபிசிஐடி விசாரிக்கக் கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று தள்ளுபடி செய்தது.

தங்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதனை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு, மாறுபட்ட தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் நீதிபதி சுந்தர் சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்து 18 எம்எல்ஏக்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தார்.

இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் வசித்து வரும் நீதிபதி எம்.சுந்தருக்கு கொலை மிரட்டல் விடுத்து மர்ம நபர்களால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து நீதிபதி சுந்தர் வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மதுரையைச் சேர்ந்த செந்தில் முருகன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “நீதிபதி எம்.சுந்தருக்கு கொலை மிரட்டல் கொடுத்தது யார் எனக் கண்டுபிடித்து கைது செய்யவில்லை. ஆனால். முதல்வர் மற்றும் தமிழக காவல்துறை தலைவர் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஆனால் நீதிபதிக்கு கொலை மிரட்டல் கொடுத்த நபர்களை கைது செய்யவில்லை.

எனவே இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி குற்றவாளியைக் கைது செய்ய உத்தரவிட வேண்டும். மேலும், அரசியல் தலையீடு உள்ளதா என உயர்மட்டக் குழு அமைத்து விசாரனை நடத்த வேண்டும்” என்று கோரி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ், சதீஷ்குமார் அமர்வில் இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதித்துறை விவகாரங்களில் வெளிநபர்கள் தலையிட வேண்டியதில்லை. நீதித்துறையே பார்த்துக்கொள்ளும் என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x