தமிழகம், புதுவையில் பரவலான மழை: பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகம், புதுவையில் பரவலான மழை: பள்ளிகளுக்கு விடுமுறை
Updated on
2 min read

தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்ததில் பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. சென்னையில் நேற்றிரவு முதல் விட்டுவிட்டு மழை பெய்வதால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.

தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்கள் அனேக இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சில இடங்களில் கன மழையும், ஓரிரு இடங்களில் மிக கன மழை பெய்யும் என வானிலை மையம் நேற்று தெரிவித்திருந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

வேலூர் மாவட்டம், அரக்கோணம், காஞ்சிபுரம், கல்பாக்கம், மாமல்லப்புரம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஆகிய இடங்களில் மழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது. சேலத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, இளையான்குடி ஆகிய பகுதிகளில் நேற்று இரவில் இருந்து மழை பெய்து வருகிறது.

புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, தருமபுரி, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, நாமக்கல், திருவாரூர், ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தருமபுரி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.

நாகை, நாகூர், வேளாங்கன்னி பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. வேதாரண்யம், தலைஞாயிறு, கோடியக்கரை, செம்போடை, ஆயக்காரன்புலம், கரியாப்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இரவு முழுவதும் மழை பெய்து வருகிறது.

மேற்குத்தொடர்ச்சிமலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி திருச்செந்தூர் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் கனமழை பெய்தது.

கனமழை காரணமாக திருவாரூர் , புதுக்கோட்டை , சேலம், நாகை மாட்டங்களுக்கு தொடர் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவையிலும் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் பல்வேறு பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்தது. சென்னை முழுதும் அனேக இடங்களில் பரவலாக மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. நள்ளிரவில் பெய்த மழை காலையிலும் பெய்ததால் பணிக்கு செல்வோரும், பள்ளிக்குழந்தைகளும் அவதிப்பட்டனர். அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in