Published : 13 Oct 2018 02:05 PM
Last Updated : 13 Oct 2018 02:05 PM

முதல்வர் பழனிசாமி பதவி விலக வேண்டும் எனக் கூறுவது சரியல்ல: தமிழிசை கருத்து

ஊழல் குற்றச்சாட்டு எழுந்தவுடனேயே முதல்வர் பதவி விலக வேண்டும் எனச் சொல்வது சரியானதல்ல என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலைத்துறை ஊழல் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதையடுத்து, ஊழல் குற்றச்சாட்டுக்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என, திமுக, பாமக, மதிமுக, இடதுசாரி உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், ஊழல் குற்றச்சாட்டு எழுந்தவுடனேயே முதல்வர் பதவி விலக வேண்டும் என்பது சரியானது அல்ல என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, சேலத்தில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “ஊழல் நிச்சயமாக ஒழிக்கப்பட வேண்டும். முதல்வர் மீதே ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது கவலையளிக்கிறது. சிபிஐ விசாரணையை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என அதிமுக தரப்பில் சொல்கிறார்கள்.

ஊழல் குற்றச்சாட்டு எழுந்தவுடனேயே முதல்வர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தும் திமுக, காங்கிரஸ் போன்ற கட்சியினர், அவர்கள் மீது குற்றச்சாட்டு வந்தபோது யாரும் பதவி விலகவில்லை. ஆனால், ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், ஊழல் குற்றச்சாட்டு சொன்னவுடன் பதவி விலக வேண்டும் எனக் கோருவது சரியான நடவடிக்கை அல்ல” என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x