Published : 18 Oct 2018 11:09 AM
Last Updated : 18 Oct 2018 11:09 AM

முதியவரிடம் முகவரி கேட்பதுபோல நடித்த  செல்போன் கொள்ளையர்கள் சிக்கினர்: போலீஸார் தீவிர விசாரணை

வளசரவாக்கத்தில் முகவரி கேட்பதுபோல நடித்து முதியவரிடம் செல்போன் பறித்துச் சென்ற 3 கொள்ளையர்களை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை நெற்குன்றம் மேட்டுக் குப்பத்தைச் சேர்ந்தவர் ஜெய பாண்டியன்(66). வளசரவாக்கம் மெஜஸ்டிக் காலனியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரே இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர், முகவரி கேட்பதுபோல நடித்து, அவரது சட்டைப் பையில் இருந்த செல்போனை எடுத்துக்கொண்டு வேகமாக இருசக்கர வாகனத்தில் சென்றனர்.

அப்போது கொள்ளையர் களைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஜெயபாண்டியன், இரு சக்கர வாகனத்தைப் பிடித்துக் கொண்டதால், சாலையில் சுமார் 30 மீட்டர் தூரத்துக்கு அவரை கொள்ளையர்கள் இழுத்துச் சென்றனர். இதனால் ஜெய பாண்டியன் உடலில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டு ரத்தம் வந்தது. இந்த கொள்ளைக் காட்சிகள் அருகே இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தன.

முதியவரை சாலையில் இழுத்துச் செல்லும் காட்சிகளைப் பார்த்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். கொள்ளையர்களைப் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்களின் உருவம் மற்றும் வாகனத்தின் பதிவு எண் போன்றவை தெளிவாக பதிவாகி இருந்தன. அதை வைத்து விருகம்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி 3 பேரையும் நேற்று கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள், மதுர வாயல் எம்ஜிஆர் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் முதலா மாண்டு படிக்கும் சக்திவேல், விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சிவா ஆகியோருடன் 17 வயது சிறுவன் ஒருவன் என்பது தெரிந்தது. முதியவரிடம் பறிக்கப்பட்ட செல்போன் மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய ஸ்கூட்டர் ஆகிய வற்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

மேலும், செல்போன் பறிப்புக்கு 3 பேரும் பயன்படுத்திய வாகனத்தில் வழக்கறிஞர் அடை யாளத்துக்கான ஸ்டிக்கர் ஒட்டப் பட்டிருந்தது. இதுகுறித்தும் போலீஸார் விசாரித்து வரு கின்றனர். 3 பேருக்கும் வேறு ஏதேனும் வழிப்பறியில் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

துணிச்சலுடன் செயல்பட்டு கொள்ளையர்களைத் தடுக்க முயன்ற முதியவர் ஜெய பாண்டியனின் வீட்டுக்கு தி.நகர் காவல் சரக துணை ஆணையர் அரவிந்தன் நேரில் சென்று சந்தித்து பாராட்டி, அவருக்கு வெகுமதி அளித்தார். இந்த நிகழ்வின்போது சென்னை வளசரவாக்கம் உதவி ஆணையர் சம்பத் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x