Published : 22 Oct 2018 03:41 PM
Last Updated : 22 Oct 2018 03:41 PM

மாணவிக்கு பாலியல் தொந்தரவு? பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் மீது தாக்குதல்; உறவினர்கள், இளைஞர்கள் ஆவேசம்

செங்கம் அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியரை அம்மாணவியின் உறவினர்கள் பள்ளி வகுப்பறையில் சரமாரியாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்நாச்சிப்பட்டு கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. அந்தப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் கண்ணன். இவர், அதே பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவிக்கு சிறப்பு வகுப்பு நடைபெற்றபோது பாலியல் தொந்தரவு அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதனால், மன ரீதியாக பாதிக்கப்பட்ட மாணவி, கடந்த சில நாட்களாக பள்ளிக்கு வரவில்லை. இந்தச் சம்பவம் பெற்றோருக்குத் தெரியவந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் கிராம இளைஞர்கள் ஆகியோர் பள்ளிக்கு இன்று (திங்கள்கிழமை) காலை சென்றுள்ளனர். அப்போது அவர்கள், வகுப்பறையில் இருந்த கணித ஆசிரியர் கண்ணனை கண்மூடித்தனமாகத் தாக்கினர். மேலும் வகுப்பறையில் இருந்த பிளாஸ்டிக் நாற்காலியைத் தூக்கி வீசியும் தாக்கியுள்ளனர். அதில், ஆசிரியரின் தலையில் ரத்த காயம் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் நிலைகுலைந்து போன ஆசிரியர், வகுப்பறையில் இருந்த கடைசி பெஞ்சில் சென்று அமர்ந்துகொண்டார். ஆசிரியர் மீதான தாக்குதலை நேரில் பார்த்த மாணவ மாணவிகள் அதிர்ச்சியில் கூச்சலிட்டனர். அவர்களை கிராம இளைஞர்கள் எச்சரித்துள்ளனர்.

இதையடுத்துப் படுகாயமடைந்த ஆசிரியரை சக ஆசிரியர்கள் மீட்டு, செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் பாச்சல் காவல்துறையினரும் தங்கள் தரப்பிலான விசாரணையைத் தொடங்கி உள்ளனர். இந்தச் சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x