Published : 27 Oct 2018 03:40 PM
Last Updated : 27 Oct 2018 03:40 PM

இலங்கையில் இனப்படுகொலையாளிகள் கூட்டணி; இந்தியா வேடிக்கை பார்க்கக் கூடாது: அன்புமணி வலியுறுத்தல்

இலங்கையில் இனப்படுகொலையாளிகள் கூட்டணி சேர்ந்திருப்பதை இந்திய அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது என, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “இலங்கை பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கே நீக்கப்பட்டு, புதிய பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது இலங்கையின் உள்விவகாரம் தான் என்றாலும் தமிழர்கள் நலனும், இந்தியப் பாதுகாப்பும் சம்பந்தப்பட்டிருப்பதால் இதை சாதாரணமாக கடந்து செல்ல முடியாது.

இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 226 இடங்களில் 106 இடங்களில் வென்ற விக்கிரமசிங்கே அதிபர் சிறிசேனாவின் இலங்கை விடுதலைக் கட்சி ஆதரவுடன் பிரதமராக பதவி வகித்து வந்தார். அவருக்கு அளித்து வந்த ஆதரவை இலங்கை விடுதலைக் கட்சி திரும்பப் பெற்றதால் விக்கிரமசிங்கே பெரும்பான்மையை இழந்து விட்டதாகக் கூறி அவர் பதவி நீக்கப்பட்டுள்ளார். ஆனால், அவருக்கு பதில் பிரதமராக பதவியேற்றுள்ள ராஜபக்சேவுக்கு இலங்கை விடுதலைக் கட்சி உறுப்பினர்களையும் சேர்த்தே மொத்தம் 95 பேரின் ஆதரவு மட்டுமே இருப்பதாகக் கூறப்படுகிறது. பிரதமர் யார்? என்பதை தீர்மானிக்க வேண்டியது நாடாளுமன்றம் தானே தவிர அதிபர் அல்ல என்று கூறி இந்த முடிவை ஏற்க மறுத்துவிட்ட ரணில் தாமே பிரதமராக நீடிப்பதாக கூறியுள்ளார். இதனால் அங்கு குழப்பம் நிலவுகிறது.

இவை அனைத்தும் இலங்கையின் உள்விவகாரங்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், இலங்கையில் இப்போது நடைபெற்றுள்ள பிரதமர் மாற்றம் இந்தியாவின் பாதுகாப்புச் சூழலையும், இலங்கையில் வாழும் தமிழர்கள் நலனையும் மிகக்கடுமையாக பாதிக்கும். இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச பதவியில் இருந்த போது அவருக்கு இந்தியா வலிந்து சென்று உதவினாலும் அவர் சீனாவுக்கு மட்டுமே விசுவாசம் காட்டினார். இப்போது கூட டெல்லி வந்து பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து விட்டு சென்ற ராஜபக்சே, சீனாவின் ஆதரவுடன் பிரதமராக பதவி ஏற்றிருக்கிறார்.

ரணில் விக்கிரமசிங்கே இந்தியாவின் ஆதரவாளர் என்று கூறப்படும் நிலையில், அவர் பதவி நீக்கப்படுவதை இந்தியா முன்கூட்டியே அறிந்து ராஜிய நடவடிக்கைகளின் மூலம் தடுத்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்யாமல் மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை இந்தியா தனக்குத் தானே தேடிக்கொண்டிருக்கிறது.

இலங்கை அதிபராக ராஜபக்சே பதவி வகித்த காலத்தில் சீனாவிடம் வாங்கியக் கடனுக்காக இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த அம்பன்தோட்டா துறைமுகத்தை ஒப்படைத்தார். அந்தத் துறைமுகத்தை ராணுவத் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டால், அது இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும். இந்த அச்சுறுத்தலை முறியடிக்கும் நோக்குடன் மாத்தளை விமான நிலையத்தை கையகப்படுத்த இந்தியா முயன்றது. அதற்கு இலங்கை அரசும் ஒப்புக்கொண்டது. ஆனால், பிரதமராகியுள்ள ராஜபக்சே, இந்தியாவிடம் மாத்தளை விமானநிலையம் ஒப்படைக்கப்படுவதை தடுப்பார்; அதுமட்டுமின்றி அம்பன்தோட்டா துறைமுகத்தில் சீனாவின் ராணுவப் பயன்பாட்டை அனுமதிப்பார். இது இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆபத்தாக முடியும்.

அதேபோல், இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே வீழ்த்தப்பட்டதற்கு பிறகு தான் ஈழப்பகுதிகளில் தமிழக மக்கள் ஓரளவு நிம்மதிக் காற்றை சுவாசிக்க முடிகிறது. தமிழர்கள் வாழும் பகுதிகளில் மீண்டும் அதிக அளவில் ராணுவத்தை நிறுத்துவதன் மூலம் தமிழர்களை ராஜபக்சே அச்சுறுத்துவார். இலங்கை அதிபராக ராஜபக்சே இருந்ததால் தான் 2009 முதல் 2015 வரை இலங்கைப் போர்க்குற்ற விசாரணையில் முன்னேற்றம் எட்டப்படவில்லை. அதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பிறகும் கூட போர்க்குற்றங்கள் குறித்து பன்னாட்டு நீதிமன்ற விசாரணையோ, இலங்கை மற்றும் பன்னாட்டு நீதிபதிகள் அடங்கிய கலப்பின நீதிமன்ற விசாரணையோ நடக்காமல் தடுத்து வந்தார்.

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் 1.40 லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டதில் ராஜபக்சே மட்டும் குற்றவாளி அல்ல. இப்போதைய இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவும் அவருக்கு துணை நின்றவர் தான்.

இனப்படுகொலையாளிகள் இருவரும் இலங்கையின் அதிபர் மற்றும் பிரதமராக பொறுப்பேற்றுள்ள நிலையில், போர்க்குற்ற விசாரணையை முற்றிலுமாக முடக்கத் துடிப்பார்கள். அதைத் தடுத்து ஈழத் தமிழர்களுக்கு நீதிபெற்றுத் தர வேண்டிய கடமையும், பொறுப்பும் இந்தியாவுக்கு இருக்கிறது. எனவே, இலங்கை பிரதமராக ராஜபக்சேவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் அங்கீகாரம் அளிப்பதை இந்தியா தடுக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, இலங்கைப் போர்க்குற்றங்கள் குறித்து நீதிவிசாரணையை இலங்கை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஐநா மனித உரிமை பேரவையில் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. ஆனால், அதற்குள் போர்க்குற்ற விசாரணை முடிவடையாது என்பதால் போர்க்குற்றங்கள் தொடர்பாக சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்தக் கோரும் தீர்மானத்தை ஐநா மனித உரிமை பேரவையில் இந்தியா கொண்டு வர வேண்டும்” என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x