Published : 11 Oct 2018 08:22 AM
Last Updated : 11 Oct 2018 08:22 AM

வருமானவரித் துறை அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்யக்கோரி தயாநிதி மாறன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், சன் டைரக்ட் மற்றும் சவுத் ஏசியன் எஃப்எம் நிறுவனங்களின் வருமானவரிக் கணக்கை மறுஆய்வு செய்ய வேண்டுமென வருமானவரித் துறை அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப் பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த 2008-09 மற்றும் 2009-10-ல் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரிக் கணக்குகளை மறுஆய்வு செய்ய வேண்டுமெனக் கோரி முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்டோருக்கு கடந்த 2015-ம் ஆண்டு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி தயாநிதி மாறன் மற்றும் நிறுவனங் கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், ‘‘நாங்கள் தாக்கல் செய்த வருமானவரிக் கணக்கை மறுஆய்வு செய்ய வேண்டுமென வருமானவரித் துறை இந்த நோட்டீஸை இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு பிறப்பிக்க அதிகாரம் கிடையாது. எனவே, சட்ட விரோதமாக எங்களுக்குப் பிறப்பித்த நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும்.

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிகையை அடிப்படையாக வைத்து வருமானவரித் துறை இந்த நோட்டீஸை எனக்கு மற்றும் எனது மனைவி உள்ளிட்ட அனைவருக்கும் அனுப்பியுள்ளது.

இந்த வழக்கில் இருந்து நான் கடந்த ஆண்டே விடுவிக்கப்பட்டு விட்டேன். சன் டைரக்ட் நிறுவனத் துக்கும், எனக்கும் பொருளாதார ரீதியாக எந்த தொடர்பும் இல்லை. எனவே, எங்களது கணக்குகளை மறுஆய்வு செய்ய வேண்டுமெனக் கோரி வருமானவரித் துறை அனுப்பி யுள்ள நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பாக நடந்தது. அப்போது வருமானவரித் துறையின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘வருமானவரித் துறையின் சார்பில் அனுப்பப்படும் நோட்டீஸ்களுக்கு ஆரம்ப நிலையிலேயே உயர் நீதி மன்றத்தை நாட முடியாது. இதற் காக வருமானவரி மேல்முறையீட்டு ஆணையத்தைத்தான் மனுதாரர் நாடி இருக்க வேண்டும். எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், “இதுதொடர்பாக தயாநிதி மாறன் மற்றும் சன் டைரக்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்” என்று உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x