Published : 09 Oct 2018 04:57 PM
Last Updated : 09 Oct 2018 04:57 PM

நக்கீரன் கோபால் விடுவிக்கப்பட்டார்: சிறையில் அடைக்க நீதிமன்றம் மறுப்பு

ஆளுநரின் துணைச் செயலர் அளித்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்ட நக்கீரன்  இதழ் ஆசிரியர் கோபாலை நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப குற்றவியல் நீதிமன்றம் மறுத்து விட்டது.

ஆளுநர் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இன்று காலை புனே செல்ல விமான நிலையம் வந்த நக்கீரன் வாரம் இருமுறை இதழ் ஆசிரியர் கோபாலை திருவல்லிக்கேணி உதவி ஆணையர் தலைமையிலான போலீஸார் கைது செய்து சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் அவரிடம் விசாரணை முடிக்கப்பட்டு அல்லிக்குளம் எழும்பூர் 13-வது குற்றவியல் நீதிமன்ற நடுவர் கோபிநாத் முன் ஆஜர்படுத்தினர்.

அப்போது நீதித்துறை நடுவர் முன் நக்கீரன் கோபாலின் வழக்கறிஞர் பி.டி.பெருமாள் ஆஜராகி வாதாடினார்.

அவரது வாதத்தில், 124 பிரிவு சட்டத்தின் கீழ் நக்கீரன் கோபாலை கைது செய்ய முகாந்திரம் இல்லை என்றும், பிரசுரித்த கட்டுரையில் ஆளுநரை எந்த வகையிலும் கோபால் மிரட்டவில்லை என்றும் கட்டுரை மூலம் ஆளுநர் பணியில் தலையிடுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் வாதம் செய்தார்.

ஏப்ரல் மாதம் வெளியான கட்டுரைக்கு இப்போது ஏன் வழக்குப் போட்டு கைது செய்யப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுப்பினார். இந்தப் பிரிவில் கைது செய்ய முகாந்திரமே இல்லை என வாதிட்டார்.

'தி இந்து' குழுமத்தின் தலைவரும், மூத்த பத்திரிகையாளருமான என்.ராம் ஊடகத் தரப்பாக ஆஜராகி வாதாடினார். இதையடுத்து குற்றவியல் நடுவர் கோபிநாத் பிரிவு 124-ன் கீழ் நக்கீரன் கோபால் மீது போடப்பட்ட வழக்கில் அவரை நீதிமன்றக் காவலில் வைக்கக்கூடாது என மறுத்தார். இதை அடுத்து நக்கீரன் கோபால் விடுவிக்கப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x