Published : 08 Oct 2018 09:59 PM
Last Updated : 08 Oct 2018 09:59 PM

திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள்; அனுமதி அளித்தது யார்?- தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கும் வகையில் அரசாணை எதுவும் உள்ளதா? என விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திரையரங்குகளில் வார நாட்களில் 4 காட்சிகளும், விடுமுறை நாட்களில் 5 காட்சிகளும் திரைப்படங்களை திரையிட அனுமதி வழங்கியுள்ள நிலையில், விதிகளை மீறி விடுமுறை நாட்களில் காலை 5 மணிக்கே ஆரம்பித்து 6 அல்லது 7 காட்சிகள் வரை திரையரங்குகள் திரையிடுவதால் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னையை சேர்ந்த தேவராஜன் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

சமீபத்தில் வந்த 'சீமராஜா', 'சாமி ஸ்கொயர்', 'செக்கச்சிவந்த வானம்' ஆகிய படங்கள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள் திரையிடப்பட்டதாகவும், அப்படி விதிகளை மீறி காட்சிகளை திரையிட்ட திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கவும் மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், பி.டி.ஆஷா அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. 6 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கவில்லை என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது, கூடுதல் காட்சிகள் திரையிட்டால் நடவடிக்கை எடுக்க என்ன மாதிரியான விதிகளை அரசு உருவாக்கியுள்ளது என்ற கேள்விகளை மனுதாரரிடம் எழுப்பியதுடன், பொது நல வழக்கு தொடர்வதற்கு முன்னர் அதற்கான உரிய கள ஆய்வை மேற்கொள்ள வேண்டுமென ஏற்கெனவே அறிவுறுத்தினர்.

திரையரங்குகள் அமைந்துள்ள சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் வணிக வரித்துறை அதிகாரிகளை வழக்கில் சேர்க்காமல் ஏன் தலைமைச் செயலாளரை மட்டும் வழக்கில் சேர்த்துள்ளீர்கள் என்பது குறித்து விளக்கமளிக்க மனுதாரருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதேசமயம், திரையரங்குகளுக்கு உரிமம் அளிக்கும் அதிகாரி யார், கூடுதல் காட்சிகள் திரையிட என்ன மாதிரியான அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தமிழக அரசும் விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

இதையடுத்து வழக்கினை வரும் 12-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x