Published : 24 Oct 2018 09:22 AM
Last Updated : 24 Oct 2018 09:22 AM

எம்.ஜி.ஆர். சிகிச்சை ஆவணங்கள் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது; ஆணையத்தில் அப்போலோ மருத்துவமனை மனு தாக்கல்

எம்ஜிஆர் சிகிச்சை தொடர்பான ஆவணங்கள் குறித்து விசாரணை ஆணையத்தில் அப்போலோ மருத்துவமனை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் எம்ஜிஆருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாகவும் தேவையெனில் அரசிடம் விசாரணை ஆணையம் கேட்கலாம் என கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுப்பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அப்போலோ மருத்துவர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இதில் ஜெயலலிதாவை ஏன் வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கவில்லை. அதை தடுத்தது யார் என்பது குறித்தும் ஆணையத்தில் விசாரணை நடந்தது.

இதனிடையே கடந்த 1984-ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர் அப்போலோ மருத்துவமனையில் இருந்து சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது எம்ஜிஆரை வெளிநாடு அழைத்துச் செல்ல எந்த அடிப்படையில் முடிவெடுக்கப் பட்டது. ஜெயலலிதாவை ஏன் வெளிநாட்டுக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லவில்லை என விசாரணை ஆணையம் கேள்வி எழுப்பியது.

மேலும், அக்டோபர் 23-ம் தேதி விசாரணையின்போது எம்ஜிஆரின் சிகிச்சை ஆவணங்கள் அனைத்தையும் வழங்க அப்போலோ மருத்துவமனைக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடந்த 10-ம் தேதி உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து நேற்று அப்போலோ மருத்துவமனை சார்பில் ஒரு மனு மட்டும் விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டது. எம்ஜிஆர் மருத்துவ ஆவணங்கள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. அந்த மனுவில் எம்ஜிஆர் சிகிச்சை தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் தமிழக அரசு வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும் ஆணையத்துக்கு தேவைப்படும் பட்சத்தில் அரசிடம் கேட்டுப் பெறலாம் என மனுவில் கூறப்பட்டுள்ளது. அப்போலோ தாக்கல் செய்த மனு மீது இன்று (24-ம் தேதி) விசாரணை நடத்தப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x