Published : 26 Oct 2018 09:44 AM
Last Updated : 26 Oct 2018 09:44 AM

சென்னை முழுவதும் மாநகராட்சி சார்பில் கொசு உற்பத்தி ஆதாரங்களை அழிக்கும் பணி தீவிரம்: வாராந்திர பணி பட்டியல் தயாரிப்பு

சென்னையில் கிழமைவாரியாக பணிப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, கொசு ஒழிப்பு ஆதாரங்களை அழிக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது.

கொசுத் தொல்லை அதிகரித்திருப்பதாக புகார்கள் வந்தால், புகை மருந்து மற்றும் தெளிப்பு மருந்து அடிப்பது ஆகிய 2 முறைகளை மட்டுமே சென்னை மாநகராட்சி பெரும்பாலும் பின்பற்றியது. கொசு உற்பத்தி ஆதாரங்களை அழிக்கும் நடவடிக்கை அவ்வப்போது மேற்கொள்ளப்படும்.

கிழமை வாரியாக

இந்நிலையில், வாரம்தோறும் கிழமைவாரியாக பணியாளர்கள் எந்தெந்த பகுதிகளில் கொசு உற்பத்தி ஆதாரங்களை அழிக்க வேண்டும் என்பது குறித்த வாரப் பணி பட்டியலை மாநகராட்சி தற்போது உருவாக்கியுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

தற்போது கொசு உற்பத்தி ஆதாரங்களை அழிக்கும் பணிக்கு மாநகராட்சி முக்கியத்துவம் அளித்து வருகிறது. வாரம்தோறும் எந்தெந்த இடங்களில் கொசு உற்பத்தி ஆதாரங்களை அழிக்கும் பணிகளை மேற்கொள்வது என வாரப் பணி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

மண்டலங்களுக்கு அறிவுறுத்தல்

திங்கள்: அரசு அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலக கட்டிடங்கள், மயானங்கள். செவ்வாய்: அரசு, தனியார் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய நல மருத்துவமனைகள், ரயில்வே மருத்துவமனைகள். புதன்: புதிய கட்டுமான இடங்கள், காலி நிலங்கள். வியாழன்: அரசு, தனியார் கல்வி நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், வீடற்றோர் காப்பகங்கள். வெள்ளி: நியாயவிலைக் கடைகள், தொழிற்சாலைகள். சனி: குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள், காவலர் குடியிருப்புகள், பொதுப்பணித் துறை குடியிருப்புகள், அடுக்குமாடி குடியிருப்புகள்.

இந்த பட்டியலின் அடிப்படையில், கொசு உற்பத்தி ஆதாரங்களை அழிக்கும் பணிகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மண்டலங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x