Published : 02 Oct 2018 06:56 PM
Last Updated : 02 Oct 2018 06:56 PM
ஜெ.ஜெ.நகர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபடுவதற்காக கத்திகளுடன் இருந்த பழைய குற்றவாளி உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஜெ.ஜெ.நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கடந்த 30-ம் தேதி அன்று இரவு ரோந்துப் பணியிலிருந்தனர். நேற்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில், பாடி புதுநகர் 9-வது தெரு மற்றும் கோயில் தெரு சந்திப்பு அருகே காவல் குழுவினர் சென்று கொண்டிருந்தபோது, அங்கிருந்த 3 நபர்கள் போலீஸாரைப் பார்த்ததும் ஓடினர். உடனே காவல் குழுவினர் அவர்களை துரத்திச் சென்று பிடித்து சோதனை செய்ததில் 3 பேரும் கத்திகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
அதன்பேரில் 3 பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில், பிடிபட்ட நபர்கள் முகப்பேரைச் சேர்ந்த கிரண் (23), சுரேந்தர் (25), குமார் (எ) டேக்டோ குமார் (24) என்பது தெரியவந்தது. 3 பேரும் கத்தியை வைத்து, அவ்வழியே வரும் நபர்களிடம் மிரட்டி வழிப்பறியில் ஈடுபடக் காத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
கிரண் மீது ஏற்கெனவே நொளம்பூர் காவல் நிலையத்தில் செல்போன் பறிப்பு வழக்குகள் உள்ளது தெரியவந்தது. குற்றச் செயலில் ஈடுபடுவதற்காக கத்திகளுடன் இருந்த கிரண், சுரேந்தர் மற்றும் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 3 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 3 பேரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT