Published : 15 Oct 2018 01:33 PM
Last Updated : 15 Oct 2018 01:33 PM
திட்டக்குடியில் 3 வயதுக் குழந்தையைக் கொன்ற பெற்றோர் தாங்களும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகேயுள்ள எடைச்செருவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் (32). இவரது மனைவி உஷா (28). இவர்களுக்கு மூன்று வயதில் பிரதிஷா என்கிற பெண் குழந்தை உள்ளது. பிரகாஷ் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் கொத்தனாராக வேலை செய்து வந்தார். அவ்வப்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு வருவார். வழக்கம்போல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரகாஷ் சொந்த ஊருக்குத் திரும்பினார்.
ஊருக்கு வந்த பிரகாஷுக்கும் அவரது மனைவி உஷாவுக்கும் தகராறு ஏற்பட்டது. இருவரும் வாக்குவாதம் செய்துகொண்டனர். பின்னர் இரவு உணவுக்குப் பின் இருவரும் தூங்கச் சென்றனர். காலையில் வெகு நேரமாக அவர்கள் வீட்டுக்கதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் கதவைத் தட்டினர்.
கதவு தட்டியும் திறக்கப்படாததால் ஜன்னல் கதவு வழியாக பார்த்தபோது உள்ளே கட்டிலில் பெண் குழந்தை பிரதிஷா கையறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்ததையும், பெற்றோர் இருவரும் தூக்கிட்ட நிலையில் பிணமாகக் கிடந்ததையும் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக திட்டக்குடி போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், மூவரது உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெண் குழந்தையைக் கொடூரமாக மணிக்கட்டை அறுத்துக் கொன்றுவிட்டு தாங்களும் தற்கொலைக்கு முயன்றது ஏன் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபகாலமாக குடும்ப உறவுகளுக்குள் ஏற்படும் தகராறுகள் கொலையிலும் தற்கொலையிலும் முடிவதும், இளம் பிராயத்திலேயே இளம் தம்பதிகள் அதிக அளவில் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதும் உளவியல் ரீதியாக சிந்திக்க வேண்டிய விஷயம் என காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT