Published : 18 Oct 2018 09:47 AM
Last Updated : 18 Oct 2018 09:47 AM

சாலைகளில் பூசணிக்காய், தேங்காய் உடைக்க வேண்டாம்: காவல் ஆணையர் வேண்டுகோள்

ஆயுத பூஜையை முன்னிட்டு சாலையில் தேங்காய், பூசணிக்காயை யாரும் உடைக்க வேண்டாம் என்று காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆயுத பூஜை விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்களது வீடுகளிலும் விளக்கேற்றி வழிபடுவார்கள். பூஜையின்போது சிலர் தேங்காய், பூசணிக்காய்களை சாலையில் போட்டு உடைத்து வழிபடுவது வழக்கம். இந்நிலையில் சாலையின் நடுவே தேங்காய் மற்றும் பூசணிக்காய்களை உடைப்பதை தவிர்க்குமாறு சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

ஆயுத பூஜை தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் வீடுகள், கடைகள் மற்றும் அலுவலகங்களில் பூஜை செய்து சாலை யின் நடுவே பூசணிக்காய் உடைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவ்வாறு சாலையின் நடுவே உடைக்கப்படும் பூசணிக்காயால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி சில சமயங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் வாகனங்களுக்கு பாதிப்பு இல்லாத வண்ணம் சாலைகளின் ஓரங்களில் பூசணிக்காயை உடைத்து விபத்துகளற்ற ஆயுதபூஜை விழாவை கொண்டாட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x