Published : 24 Oct 2018 08:06 PM
Last Updated : 24 Oct 2018 08:06 PM
கிரண்பேடி விவகாரத்தை நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எழுப்பும் என்று அகில இந்திய காங்கிரஸ் செயலரும், புதுவை காங்கிரஸ் பொறுப்பாளருமான சஞ்சய் தத் தெரிவித்தார்.
புதுச்சேரியில் நிர்வாகிகளைச் சந்தி்த்த பின்பு காரைக்கால் புறப்படும் முன்பு செய்தியாளர்களிடம் சஞ்சய் தத் கூறுகையில், ''கூட்டாட்சிக்கு எதிராக மத்திய பாஜக அரசு எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கு புதுவை தான் சிறந்த எடுத்துக்காட்டு. பல்வேறு மாநிலங்களில் சிறுபான்மை பலத்துடன் இருக்கும் பாஜக, பணத்தை வைத்து குதிரை பேரம் நடத்தி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. புதுவையில் அது நடக்காது என்பதால் துணை நிலை ஆளுநரை பயன்படுத்தி கொல்லைப்புறமாக ஆட்சி நடத்த பாஜக முயற்சி செய்கிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு எதிராக ஆளுநர்களை வைத்து பிரதமர் மோடி ஆட்சி நடத்த முயற்சி செய்கிறார். இதற்கு புதுவை தான் மிகச்சிறந்த உதாரணம். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் ஆளுநர் மாளிகையை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தவறாகப் பயன்படுத்தி வருகிறார். தனது அதிகார எல்லையைத் தாண்டியும், அரசியல் சாசன சட்டங்களுக்கு எதிராகவும் கிரண்பேடி செயல்பட்டு வருகிறார். இது மக்களாட்சிக்கு எதிரானது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுவை அரசுக்கு ஆளுநர் கிரண்பேடி தொல்லை கொடுக்கும் விவகாரம் தொடர்பாக வரும் குளிர்கால கூட்டத்தொடரின்போது மக்களவை, மாநிலங்களவையில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் குரல் கொடுத்து பிரச்னையை எழுப்புவார்கள்.
ராகுல் பிரதமர் வேட்பாளர் இல்லை என்று ப.சிதம்பரம் கூறியுள்ளது தொடர்பாக நான் படிக்கவில்லை. அவர் மூத்த தலைவர். என்னைப் பொறுத்தவரையிலும், தொண்டர்களைப் பொறுத்தவரையிலும் ராகுல்தான் பிரதமர் வேட்பாளர். இவ்விஷயத்தை நான் சர்ச்சைக்குள்ளாக்க விரும்பவில்லை'' என்று சஞ்சய் தத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT