Published : 03 Oct 2018 07:27 PM
Last Updated : 03 Oct 2018 07:27 PM

தரமற்ற முறையில் உணவு தயாரிப்பு: பிரபல பிரியாணி கடைக்கு சீல்

 

தரமற்ற முறையில், காலாவதியான பொருட்களை வைத்து பிரியாணி தயாரித்த ஆசிப் பிரியாணி கடைக்கு உணவுப்பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

சென்னை கிண்டியில் ஆசிப் பிரியாணி கடையின் உணவு தயாரிக்கும் சமையற்கூடம் உள்ளது. தமிழகம் முழுவதும் இந்நிறுவனத்துக்கு கிளைகள் உள்ளன. இந்நிறுவனத்தின் பிரியாணி உட்பட பிற உணவுப் பொருட்கள் தரமற்ற முறையில் தயாரிக்கப்படுவதாகவும், கெட்டுப்போன உணவுகளை விற்பனை செய்வதாகவும் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தொடர் புகார்கள் வந்தன.

இதையடுத்து ஆசிப் பிரியாணி கடைகளில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை கிண்டியில் உள்ள ஆசிப் பிரியாணி கடை, சமையற்கூடத்தில் உணவுப் பாதுகாப்பு அதிகாரி கதிரவன் தலைமையில் சோதனை நடத்தப்பட்டது. இதில் உணவுப்பொருட்கள் தயாரிக்கும் சமையற்கூடம் தரமற்ற முறையில் இருந்ததும், கெட்டுப்போன பொருட்கள் பயன்படுத்தப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து கிண்டி ஆசிப் பிரியாணி கடையை பூட்டி சீல் வைத்து, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

இதுகுறித்து உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் கேட்டபோது, “ஆசிப் பிரியாணி கடையில் ஏற்கெனவே 3 முறை சோதனை நடத்தி, சுகாதாரம் இல்லாத வகையில் சமையற்கூடம் இருப்பதாகவும், அதைச் சரி செய்யுமாறும் நோட்டீஸ் அனுப்பினோம். ஆனால் அதற்குப் பிறகும் எந்த முன்னேற்ற நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

இன்று கிண்டியில் உள்ள பிரியாணி கடைக்குச் சென்று சோதனை நடத்தியபோது, சுகாதாரமற்ற முறையில் சமையற்கூடம் இருந்தது. இதனால் அந்தக் கடையை பூட்டி சீல் வைத்து இருக்கிறோம்” என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x