Published : 21 Aug 2014 11:36 AM
Last Updated : 21 Aug 2014 11:36 AM

டாமின் சேர்மன் கொலை வழக்கில் மறுவிசாரணை: உச்ச நீதிமன்றம்

டாமின் சேர்மன், அவரது மனைவி, வேலைக்காரி ஆகியோர் கொலை வழக்கை சிபிஐ மறுவிசாரணை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

சென்னை அசோக்நகரில் வசித்து வந்த ‘டாமின்’ (தமிழ்நாடு மினரல் கார்ப்பரேஷன்) சேர்மன் சரவணன், அவரது மனைவி கஸ்தூரி, வேலைக்காரி அன்பரசி ஆகியோர் கடந்த 2008-ம் ஆண்டு வீட்டுக்குள் கொடூரமாக கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். சரவணன் - கஸ்தூரி தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. இதனால் இவர்களின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அபகரிக்கும் நோக்கத்தில் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் அசோக் நகர் போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. அவர்கள் தீவிரமாக விசாரித்து கொலை செய்யப்பட்ட சரவணன் - கஸ்தூரி தம்பதியின் உறவினர்களான யாசிம், உதயா, மோகன்தாஸ், அவரது மனைவி சத்யபாமா ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த விரைவு நீதிமன்றம், கைது செய்யப்பட்ட 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபரில் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து 4 பேரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். ‘இந்த வழக்கில் எங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. உண்மையான குற்றவாளிகளை சிபிஐ போலீஸார் கண்டுபிடிக்கவில்லை. எனவே, வழக்கில் இருந்து எங்களை விடுவிக்க வேண்டும். உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க மறுவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று மேல்முறையீட்டு மனுவில் கோரியிருந்தனர்.

அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 4 பேரையும் ஜாமீனில் விடுதலை செய்தது. மேலும் சரவணன் உள்ளிட்ட 3 பேர் கொலை வழக்கை சிபிஐ மறுவிசாரணை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சிபிஐ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், 3 பேர் கொலை வழக்கை சிபிஐ மறுவிசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த வழக்கை சிபிஐ மீண்டும் விசாரிக்கவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x