Published : 22 Aug 2018 09:24 AM
Last Updated : 22 Aug 2018 09:24 AM

கேள்விக்குறியாகும் வெளி மாநில பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பு: தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் ஆதங்கம்

 

தரவுகள் இல்லாததால் வெளி மாநில பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் கண்ணகி பாக்கியநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் மற்றும் ‘ரீடு’ தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய நூற்பாலைகள் மற்றும் ஆயத்த ஆடை நிறுவனங்களில் பணிபுரியும் வெளி மாநில பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்த கலந்தாய்வுக் கூட்டம் திருப்பூரில் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி முன்னிலை வகித்தார்.

தலைமை வகித்து, கண்ணகி பாக்கியநாதன் பேசியதாவது:

திருப்பூர், கோவை, ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், கரூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் நூற்பாலை மற்றும் ஆயத்த ஆடை தொழிற்சாலைகளுக்கு வெளி மாநிலத் தொழிலாளர்கள் (குறிப்பாக பெண் தொழிலாளர்கள்) அதிக அளவில் வருகிறார்கள். தற்போது, தமிழகத்தில் 40 சதவீத வெளிமாநிலத் தொழிலாளர்கள் உள்ளனர்.

ஒடிசா, ஜார்க்கண்ட், அசாம், மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் பணிபுரிகிறார்கள்.

வெளி மாநிலத் தொழிலாளர்கள் பாதுகாப்புச் சட்டம் 1979-ன் படி, இவர்கள் எங்கு பணிபுரிகிறார்களோ அந்த மாவட்டத்தில் பதிவு செய்ய வேண்டும். ஆனால், குறைவான எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் மட்டுமே பதிவு செய்துள்ளனர்.

வெளிமாநிலத் தொழிலாளர்கள் எவ்வளவு பேர் பணிபுரிகின்றனர் என்பது குறித்த தரவுகள், அவர்களின் பின்புலம் உட்பட எந்தவித தகவல்களும் மாவட்டம் மற்றும் மாநில அளவில் இல்லை. இதனால், அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது.

குறிப்பாக, வெளிமாநிலத் தொழி லாளர்களுக்கு சரியான சம்பளம் வழங்கப்படுகிறதா, அவர்கள் அதனை சேமிக்கிறார்களா அல்லது வீட்டுக்கு அனுப்புகிறார்களா, சுகா தாரம் மற்றும் மகப்பேறு காலங் களில் பெண் தொழிலாளர்களுக்கு தேவையான மருத்துவம் வழங்கப்படுகிறதா என்பது குறித்தெல்லாம் நிறுவனங்கள் கண்காணிப்பதில்லை.

உள் புகார் குழு

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின் படி, கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத் தில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் 90 பேர் இறந்துள்ளனர். எந்த காரணங்களால் இறந்தார்கள் அல்லது இறந்தவர்களின் விவரங் கள் உள்ளதா அல்லது இறந்த வர்களின் உறவினர்களுக்கு தகவல் சொல்லப்பட்டதா என்பது குறித்த தகவல்களும் இல்லை.

10 பெண்கள் வேலை செய்யும் இடத்தில் உள் புகார் குழு (Internal Complaints Committee) அமைக்க வேண்டும். 10 பெண்களுக்கும் குறைவாக பணி செய்யும் இடத் தில், மாவட்ட அளவில் ஆட்சியர் தலைமையில் உள்ளூர் புகார் குழுவிடம் (Local Complaints Committee) புகார் அளிக்கலாம். குறைவான ஊதியத்தில் பொன் முட்டையிடும் வாத்தாக வட மாநிலத் தொழிலாளர்கள் உள்ள னர். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம். இவ் வாறு கண்ணகி பாக்கியநாதன் பேசினார்.

பின்னர் நடந்த கருத்தரங்கில் சமூக நல அலுவலர் ஐ.பூங்கோதை, ரீடு நிர்வாக இயக்குநர் கருப்புசாமி, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சமூக நல அலுவலர்கள், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கள், தொழிற்சாலை ஆய்வாளர்கள் மற்றும் போலீஸார் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x