கருணாநிதி நினைவில் உதித்த ‘உழவர் சந்தை’: ஏழைகளுக்கும் ‘காய்கறி’ உணவு வசமானது

கருணாநிதி நினைவில் உதித்த ‘உழவர் சந்தை’: ஏழைகளுக்கும் ‘காய்கறி’ உணவு வசமானது
Updated on
2 min read

விவசாயிகள், விளைநிலத்தில் விளையும் விளைப்பொருட்களை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக பொதுமக்களிடம் விற்பனை செய்ய, மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி 1999 ஆம் ஆண்டு தொடங்கிய உழவர் சந்தைகள் தற்போது வரை வெற்றிகரமாக செயல்படுகிறது.

கடந்த காலத்தில் வியாபாரிகள், இடைத்தரகர்கள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் காய்கறிகளை சந்தைகளில் கூடுதல் விலைக்கு விற்றனர். அதனால், காய்கறிகள் ஏழை மக்களுக்கு எட்டா உணவாகிவிட்டது. குழந்தைகளுக்கு சத்து குறைபாடுகள் ஏற்பட்டது. பெண்களுக்கு ரத்தசோகை ஏற்பட்டது.

அப்போது, 1999 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த கருணாநிதி நினைவில் உதித்ததுதான் உழவர் சந்தை திட்டம். விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைவிக்கும் காய்கறிகள், பழங்கள், தேங்காய் உள்ளிட்ட வேளாண் விளைப்பொருட்களை இடைத்தரகர்கள், வியாபாரிகள் குறுக்கீடு ஏதும் இல்லாமல் நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்யும் வகையில், உழவர் சந்தை திட்டம் தொடங்கப்பட்டது. 1999 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் தேதி, நேரு பிறந்த நாளன்று முதல் உழவர் சந்தையை மதுரை அண்ணா நகரில் கருணாநிதி தொடங்கி வைத்தார். இந்த உழவர் சந்தை தற்போது வரை 19 ஆண்டுகளாக சிறப்பாக செயல்படுகிறது. அதன் பிறகு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல உழவர் சந்தைகள் வேகமாக திறக்கப்பட்டன. சென்னை பல்லாவரத்தில் 100 ஆவது உழவர் சந்தையை கருணாநிதி வைத்தார்.

மற்ற இடங்களை விட உழவர் சந்தைகளில் விலை குறைவு என்பதால் நுகர்வோர் மத்தியிலும் பெரும் வரவேற்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் தற்போது 180 உழவர் சந்தைகள் வரை செயல்படுகின்றன. இந்த உழவர் சந்தைகள், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர்கள் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன. உழவர் சந்தைகள் ஒவ்வொன்றுக்கும் தனி அதிகாரி நியமிக்கப்பட்டு அவர்களுக்கு கீழ் 4 முதல் 10 ஊழியர்களுடைய கண்காணிப்பில் பெரிய வர்த்தமாகவே செயல்படுகின்றன. உழவர் சந்தைகளுக்கு விவசாயிகளை காய்கறிகளை கொண்டு விற்பனை செய்ய அவர்களுக்கு கருணாநிதி சில சலுகைகளையும் வழங்கினார்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் மூலம் குறிப்பிட்ட நேரங்களில், உழவர் சந்தை தொடங்கும் நேரத்தில் அதிகாலையில் விவசாய கிராமங்களில் இருந்து உழவர் சந்தைக்குப் போக்குவரத்து வசதி செய்துகொடுத்தார். உழவர் சந்தைகளுக்கு விவசாயிகள் கொண்டு வரும் காய்கறிகளுக்கு பஸ்களில் சுமைக்கட்டணம் இல்லை. உழவர் சந்தையில் விற்பனை மேற்கொள்ள விவசாயிகளுக்குத் தனி அடையாள அட்டைகளையும் வழங்கினார். உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு நியாயமான விலையும், காய்கறிகள் விற்க விற்க கையில் பணமும் கிடைத்ததால் ஆர்வமடைந்த விவசாயிகள் அவர்கள் குடும்பமாக உழவர் சந்தையில் அமர்ந்து காய்கறிகளை விற்பனை செய்தனர்.

தற்போது வரை சிறு, குறு விவசாயிகளுக்கு உழவர் சந்தைகள் நிலையான வருவாய் கொடுக்கிறது. ஒவ்வொரு உழவர் சந்தையிலும் குறைந்தபட்சம் 25 டன் முதல் 150 டன் வரை காய்கறிகள் விற்பனையாகின. ஓசூர், மதுரை, திருப்பூர், கோவை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் உழவர் சந்தைகள், விற்பனையில் தனியார் காய்கறிகள் சந்தைகளை பின்னுக்கு தள்ளின. திமுக ஆட்சி மாறும்போது அதிமுக அரசு இந்த உழவர் சந்தைகளுக்கு முக்கியத்தும் கொடுக்காது என்ற குற்றச்சாட்டும் உள்ளது. ஆனாலும், கருணாநிதி தொடங்கிய இந்த உழவர் சந்தை திட்டம் தற்போது வரை வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

கூடுதல் விலைக்கு காய்கறிகள் விற்பதை தடுக்க சந்தையின் 4 இடங்களில் உழவர்சந்தை நிர்ணயித்த விலைப்பட்டியல் பலகை வைக்கப்படுகின்றன. உழவர் சந்தை விலைகளை அதற்காக நியமிக்கப்பட்ட குழு நாள்தோறும் நிர்ணயிக்கிறது.

நாடு முழுவதும் செயல்படுத்தப்படுமா?

நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கருணாநிதி தொடங்கிய இந்த உழவர் சந்தை திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தினால், விலைவாசி உயர்விலிருந்து மக்கள் தப்பிக்க முடியும் என மக்களவை, மாநிலங்களவையில் திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. திமுக ஆட்சியில் இருந்தபோது துணை முதல்வராக ஸ்டாலின் இருந்தபோது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தேசிய அளவில் மாநில முதல்வர்கள் மாநாடு டெல்லில் நடந்தது. அப்போது, “உழவர் சந்தையின் வாயிலாக விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தமுடியும் என்றும் இந்தியா முழுவதும் தமிழகத்தைப் போல் உழவர் சந்தைகள் துவக்கப்பட வேண்டும்” என தமிழக அரசின் சார்பில் ஸ்டாலின் பேசினார். தற்போது இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் கருணாநிதியின் உழவர் சந்தை திட்டம் நாடு முழுவதும் விரிவுப்படுத்துவதற்கான காலம் வெகுதொலைவில் இல்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in