Published : 07 Aug 2018 12:27 PM
Last Updated : 07 Aug 2018 12:27 PM

சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றும் அரசாணை: உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

 சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு வழக்குகளை சிபிஐ விசாரிக்கும் தமிழக அரசின் அரசாணக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. அதிகாரிகளுக்கு எதிராக உத்தரவிட நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஒழுங்காக செயல்படாததால் அது தொடர்பான அனைத்து வழக்குகளும் சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருந்தது.

சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் விசாரணை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு அமர்வு முன் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையில் அமைக்கப்பட்ட சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பாக செயல்படவில்லை என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், நீதிமன்றத்தால் இந்தப் பிரிவு அமைக்கப்பட்டு ஓராண்டாகியும் இதுவரை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சார்பில் அரசுக்கு ஒரு விசாரணை அறிக்கை கூட வழங்கவில்லை என்றும் தமிழக அரசு தெரிவித்தது. இதனால் சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

“மாநில அரசின் காவல்துறை மீது உங்களுக்கே நம்பிக்கையில்லையா” என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள். இதுகுறித்து சிலை கடத்தல் தரப்பு வழக்குகளை சிபிஐக்கு மாற்றும் அரசின் கொள்கை முடிவை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

சிலைகடத்தல் தடுப்புப் பிரிவின் விசாரணை நிலைஅறிக்கையும், சிலைகளை வைப்பதற்கான ஸ்ட்ராங் ரூம்கள் அமைப்பதற்கான அறிக்கையையும் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் அமர்வு வழக்கு விசாரணையை இன்று ஒத்திவைத்திருந்தனர்.

இந்த முடிவை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில் சிபிஐக்கு மாற்றும் முடிவு உள்நோக்கம் கொண்டது, உயர் அதிகாரிகள் முக்கிய நபர்களைக் காப்பாற்றவே அரசு அவசர அவசரமாக நடவடிக்கை எடுத்துள்ளது. அரசின் நடவடிக்கை சந்தேகத்துக்கிடமாக உள்ளது. எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்நிலையில் வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கும்போதே தமிழக அரசு திடீரென சிபிஐக்கு மாற்றி அரசாணை பிறப்பித்தது. இந்நிலையில் வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான எதிர் தரப்பினர் அரசுத்தரப்பினர் அவசரக்கோலத்தில் மாற்றியுள்ளனர், முறையான எந்தவித இதில் உள்நோக்கம் உள்ளது என வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட அமர்வு நீதிபதிகள், கடந்த ஓராண்டாகியும் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் அல்லது விரைந்து முடிக்கவேண்டும் என்று அந்த 23 உத்தரவுகளை அரசு செயல்படுத்தாமல் இருந்தது. ஆனால் அவசர அவசரமாக ஒரே நாளில் சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.

சிபிஐக்கு மாற்ற அவசரம் காட்டிய அரசு, ஏன் நீதிமன்ற உத்தரவுகளை முறையாகச் செயல்படுத்தவில்லை, இதுபோன்ற நடவடிக்கைகளால் அதிகாரிகளுக்கு எதிராக உத்தரவிட நேரிடும்.  தலைமைச் செயலாளர், டிஜிபி நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும் எச்சரித்ததோடு  சிபிஐக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்த தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x