Published : 01 Aug 2018 02:36 PM
Last Updated : 01 Aug 2018 02:36 PM
திமுக தொண்டர்கள் யாரும் தங்கள் இன்னுயிரை இழந்திடும் எவ்வித முயற்சியிலும் ஈடுபட வேண்டாம் என, அக்கட்சயின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “திமுக தலைவர் கருணாநிதி உடல் நலிவுற்றிருக்கிறார் என்ற அதிர்ச்சி தாங்காமல் திமுகவினர் 21 பேர் இறந்துள்ளார்கள் என்ற செய்தியறிந்து மன அழுத்தத்தில் உறைந்து போயிருக்கிறேன். கருணாநிதியின் உடல்நலக்குறைவால் ஏற்பட்டுள்ள சோகத்துடன் தொண்டர்கள் இறந்துள்ளார்கள் என்ற செய்தி என்னை மீளாத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. உயிரிழந்த தொண்டர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் குடும்பத்திற்கு எனது இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
காவேரி மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல், கருணாநிதியின் உடல்நிலை சீராகி வருகிறது. கருணாநிதிக்கு மருத்துவர்கள் அடங்கிய குழு தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளித்து அவரது உடல்நிலையைக் கண் அயராது கண்காணித்து வருகிறது. கொட்டும் மழையிலும் நனைந்துகொண்டே தலைவா வா என்று எழுப்பிய அந்த உயிர்த்துடிப்பான உணர்ச்சிமிகு முழக்கங்கள் சிறிதும் வீண் போகவில்லை என்பதற்கு அடையாளமாக கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது என்ற நல்ல செய்தியை வெளியிட்டு நமக்கெல்லாம் காவேரி மருத்துவமனை நன் நம்பிக்கையைத் தந்து கொண்டிருக்கிறது.
திமுக எனும் மாபெரும் இயக்கம் ஏராளமான தியாகத் தழும்புகளை இன்முகத்தோடு ஏற்ற, தடந்தோள் கொண்ட தொண்டர்களால் தாங்கி நிற்கும் அசைக்க முடியாத கோட்டை. அந்த தொண்டர்களில் ஒருவரை இழந்தால் கூட அந்தச் செய்தி, என் மனதை இடிபோல் வந்து தாக்குகிறது என்பதை தொண்டர்கள் உணர வேண்டும்.
அண்ணா கற்றுக்கொடுத்து இன்றுவரை கருணாநிதியால் கடைப்பிடிக்கப்பட்டு வரும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற தாரக மந்திரத்தை மனதில் தாங்கி அதனை வாழ்நாள் முழுவதும் பின்பற்றி அண்ணாவுக்கும், கருணாநிதிக்கும் பெருமை சேர்க்க வேண்டுமே அன்றி தொண்டர்கள் யாரும் தங்கள் இன்னுயிரை இழந்திடும் எவ்வித முயற்சியிலும் ஈடுபட வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT